ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூருக்கு ஓய்வு வழங்கப்பட்டு முகேஷ் குமார் அறிமுகம் செய்யப்பட்டார். இதன்பின் இந்திய அணியின் தரப்பில் களமிறங்கிய ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

இருவரும் அரைசதம் கடந்து சிறப்பாக ஆடினர். உணவு இடைவேளை வரை இந்திய அணி எந்த விக்கெட்டையும் கொடுக்கவில்லை. இதனையடுத்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஹோல்டரை வைத்து அட்டாக் செய்தது. அதில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சுப்மன் கில் 10 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்சாக, ரோகித் சர்மா மீது அழுத்தம் அதிகரித்தது. இதனால் அடுத்த 2 ரன்னில் ரோகித் சர்மாவும் 80 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் விராட் கோலி - ரஹானே கூட்டணி இந்திய அணி மீட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஹானே 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விராட் கோலி - ஜடேஜா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு ரன்னையும் விரைந்து எடுத்த விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 30வது அரைசதத்தை விளாசினார்.
தொடர்ந்து அசத்தலான ஃபார்மில் இருந்த விராட் கோலி, தனது ட்ரேட் ஸ்ட்ரைக்கான கவர் ட்ரைவ் பவுண்டரியை விளாசி அசத்தினார். இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் 2வது நாளில் விராட் கோலி 76வது சதத்தை விளாசுவார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.