பெங்களூரு: மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அடுத்தபடியாக 8 முறை பிளே ஆஃப் சென்ற ஒரே அணி பெங்களூரு மட்டும் தான் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் எப்போதும் பெங்களூரு - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணி களமிறங்கியது.

பெங்களூரு மைதானத்தில் பேட்டிங் களமிறங்கிய விராட் கோலி மீண்டும் தனது பீஸ்ட்டை வெளியில் கொண்டு வந்தார். மும்பை அணியின் ஆர்ச்சர் முதல் பியூஷ் சாவ்லா வரை அத்தனை பந்துவீச்சாளர்களையும் வெளுத்து வாங்கினார்.
இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயம் ஈ சாலா கம் நம்தே என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். இந்தப் போட்டிக்கு பின் விராட் கோலி பேசுகையில், 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சொந்த மண்ணில் விளையாடுவது சிறந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. இதைவிட சிறந்த போட்டியை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. நாங்கள் முதல் 17 ஓவர்களை சிறப்பாக வீசினோம். ஆனால் திலக் வர்மா மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார். நெட் ரன்ரேட்டையும் கவனத்தில் கொண்டு அதிக பந்துகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பதே எங்களின் திட்டமாக இருந்தது.
கடைசி மூன்று ஓவர்களில் மும்பை அணிக்கு ஒரு உத்வேகம் கிடைத்தது. அதே உத்வேகத்துடன் மும்பை அணியை தொடர விடக் கூடாது என்று எண்ணியே, பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடினோம். ஏனென்றால் புதிய பந்தில் பெங்களூரு மைதானத்தில் விளையாடுவது எளிதல்ல. நாங்கள் இங்கு கால் வைத்த போதே மைதானம் முழுமையாக இருந்தது. அனைத்து சீட்களிலும் ரசிகர்கள் அமர்ந்திருந்தார்கள். இன்றைய நாளின் வெற்றிக்கு ரசிகர்களும் மிக முக்கியக் காரணம். அவர்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது.

கரண் சர்மா மிகச்சிறப்பாக பந்துவீசினார். இடதுகை பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து வீழ்த்தியது மிகச்சிறந்த பவுலிங். கடந்த ஆண்டு முதலே கரண் ஆர்சிபி அணிக்காக பந்துவீசி வருகிறார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவ்வளவு ஏன், வலை பயிற்சியில் கூட அவரை யாராலும் சிக்சர் அடிக்க முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கி சிறப்பாக ஆடிய கரண் சர்மாவுக்கு வாழ்த்துகள்.
அதேபோல் இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நீண்ட நாட்களாக இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தேன். மும்பை 5 முறையும், சென்னை 4 முறையும் கோப்பைகளை வென்றிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு பின் அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி தான் முன்னேறி இருக்கிறது. சரியாக 8 முறை பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அதனால் ஆர்சிபி அணி யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. நடப்பு தொடரை பொறுத்தவரை எப்போதும் எங்களின் கவனம் ஒரே போட்டி மீது மட்டுமே இருக்கும் என்று தெரிவித்தார்.