பெங்களூரு: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் வெற்றிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி அணியின் விராட் கோலி, டூ பிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அரைசதம் விளாசியுள்ளனர்.
16வது சீசனுக்கான 15வது லீக் போட்டியில் டூ பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி சார்பாக விராட் கோலி - டூ பிளஸிஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய விராட் கோலி ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். க்ருனால் பாண்டியா ஓவரில் சிக்சர் விளாசிய விராட் கோலி, மார்க் வுட் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்சர் என்று வெளுத்து வாங்கினார். இதன் காரணமாக ஆர்சிபி அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் குவித்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் அமித் மிஸ்ரா வீசிய பந்தில் விராட் கோலி 61 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து டூ பிளஸிஸ் - மேக்ஸ்வெல் கூட்டணி சேர்ந்தது.
விராட் கோலி இருந்தவரை நிதானம் காட்டிய டூ பிளஸிஸ், விராட் கோலி ஆட்டமிழந்த பின் அதிரடி மோடுக்கு மாறினார். 14 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 117 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 15வது ஓவரை வீசிய ரவி பிஷ்னாய் பந்துவீச்சில், டூ பிளஸிஸ் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி மிரட்டினார். அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் டூ பிளஸிஸ் 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 17 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 160 ரன்கள் சேர்த்திருந்தது.

தொடர்ந்து உனாத்கட் வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 23 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் தன் பங்கிற்கு ஆவேஷ் கான் பந்தில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி மேக்ஸ்வெல் 24 பந்துகளில் அரைசதம் கடந்தார். அந்த ஓவரில் மட்டும் ஆர்சிபி அணி 20 ரன்கள் எடுத்தது. பின்னர் மார்க் வுட் வீசிய கடைசி ஓவரில், 9 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்துள்ளது. இறுதிவரை களத்தில் இருந்த டூ பிளஸிஸ் 79 ரன்கள் விளாசினார்.