சேலம்: இந்திய வீரர் நடராஜன் தான்பெற்றதை இந்த சமூகத்திற்கு மீண்டும் திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த மைதானத்தை கட்டியுள்ளதாக இந்திய அணியின் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதேபோல் சிறிய நகரத்தில் இருந்து சாதித்த வீரர்களில் தோனிக்கு பின் நடராஜன் மட்டுமே இருப்பதாக தினேஷ் கார்த்திக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
விடாமுயற்சியும், உழைப்பும் இருந்தால் எந்தத் துறையிலும் நிச்சயம் சாதிக்கலாம் என்று தமிழ்நாடு இளைஞர்கல் மனதில் நம்பிக்கையை விதைத்தவர் நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன், இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் அறிமுகம் கண்டு சாதனை படைத்தார். அதேபோல் காபா மைதானத்தில் இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றிக்கு நடராஜனும் முக்கிய காரணமாக அமைந்தார்.

இதையடுத்து ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு உதவும் வகையில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை நடராஜன் தொடங்கி நடத்தி வருகிறார். அங்கு பயிற்சி பெற்ற ஏராளமான வீரர்கள் சென்னை டிவிஷன் லீக் போட்டிகள், டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
அதேபோல் சேலம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற இளைஞர்களுக்காக சர்வதேச தரத்திலான மைதானம் கட்ட வேண்டும் என்பதே கனவு என்று நடராஜன் கூறி இருந்தார். அந்த கனவை இன்று நனவாக்கியுள்ளார் நடராஜன். சின்னப்பம்பட்டியில் நடராஜன் கட்டியுள்ள நடராஜன் கிரிக்கெட் மைதானம் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் 4 பிட்ச்கள், இரண்டு பயிற்சி தடங்கள், உடற்பயிற்சி கூடம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் கேலரியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான வீரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தை திறந்து வைத்த இந்திய கிரிக்கெட் தினேஷ் கார்த்திக் பேசுகையில், நடராஜன் மிகவும் சுவாரஸ்யமான மனிதர். அவரின் கிரிக்கெட் பயணம் அனைவருக்கும் ஊக்கமளிக்கக் கூடிய ஒன்று.
பலரும் முன்னேறிய பின்னர் உதவியவர்களை மறந்துவிடுவார்கள். ஆனால் நடராஜன் அவரின் பயிற்சியாளரும் வழிகாட்டியுமான ஜேபி அவர்களுடன் இன்றும் நின்று கொண்டிருக்கிறார். பெரிய நகரங்களில் இருந்து ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் சின்ன ஊரில் இருந்து வந்து சாதித்தவர் தான் எம்எஸ் தோனி. அதேபோல் சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து வந்து இந்திய கிரிக்கெட்டில் சாதித்தவர் நடராஜன்.
ஐபிஎல் தொடருக்கு பின் நடராஜன் ஏன் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்று ஹெய்டனும், ரிக்கி பாண்டிங்கும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அதுதான் நடராஜன் ஆஸ்திரேலியாவில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம். தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக ஏராளமானோர் விளையாடி இருக்கிறார்கள். நானும் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன்.
ஆனால் எனக்கு இப்படியொரு மைதானம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே இல்லை. என்னுடன் இருக்கும் மக்கள் என்னைவிட மிகப்பெரிய வீரர்களாக வர வேண்டும் என்ற ஆசையுடன் நடராஜன் மைதானத்தை கட்டியுள்ளார். நடராஜன் தான் பெற்றதை இந்த சமூகத்திற்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதன் சாட்சிதான் இந்த மைதானம் என்று தெரிவித்துள்ளார்.