இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசிய நிலையில், உடனடியாக சதை பிடிப்பால் பாதிக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். நம்பர் 4 வரிசையில் இதுவரை 20 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 சதங்கள், 5 அரைசதங்கள் உட்பட 805 ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாகவே 6 மாதங்களுக்கு பின்னரும் நேரடியாக ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் தேர்வு செய்யப்பட்டார்.

ஷார்ட் பால் பிரச்சனை இருந்தாலும், சுழற்பந்துவீச்சாளர்களை வெளுத்து கட்டும் வீரர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் முக்கியமானவர். இதன் காரணமாகவே ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் உடனடியாக வாய்ப்பை பெற்றார். ஆனால் அதன்பின் சூப்பர் 4 சுற்றின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகு பிடிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் கடைசி வரை ஸ்ரேயாஸ் ஐயரால் வர முடியவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் இன்று நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டி ஸ்ரேயாஸ் ஐயருக்கு அக்னி பரீட்சையாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் களமிறங்கிய முதல் பந்தில் இருந்து எதைப் பற்றியும் கவலைப்படாத ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரியும் சிக்சருமாய் வெளுத்து கட்டினார். ஃபார்மில் உள்ள சுப்மன் கில் நிதானமாக விளையாட, ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்ட் செட்டிற்கு ஏற்ப பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதன் காரணமாக 41 பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்தார்.

இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி அடுத்தக் கட்டத்திற்கு சென்றது. ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரிகளை விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர் 86 பந்துகளில் சதத்தை எட்டினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கும் 3வது சதம் இதுவாகும். ஆனால் சதம் விளாசிய உடனே, அவருக்கு மீண்டும் காயங்கள் பிரச்சனையை கொடுத்தது.
ஆசியக் கோப்பை தொடரின் போது முதுகு பிடிப்பு ஏற்பட்ட நிலையில், இந்தப் போட்டியின் போது கையில் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் ஸ்ரேயாஸ் ஐயரால் ஆட்டம் தடைபட்டது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்தாரா என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.