ஐதராபாத்: ஐதராபாத் அணி வெற்றிபெறுவதற்கு 204 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. ராஜஸ்தான் அணி தரப்பில் சஞ்சு சாம்சன், பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
16வது ஐபிஎல் சீசனின் 3வது நாளின் முதல் போட்டியில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. கேப்டன் மார்க்ரம் இன்னும் அணியுடன் இணையாததால், இந்தப் போட்டிக்கு புவனேஷ்வர் குமார் தலைமையேற்றுள்ளார்.

இந்த நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் - ஜெய்ஸ்வால் இணை களமிறங்கியது.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாட 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 37ஆக இருந்தது. இதன்பின்னர் வாஷிங்டன் சுந்தர் வீசிய 4வது ஓவரில் 19 ரன்களும், நடராஜன் வீசிய 5வது ஓவரில் 17 ரன்கள் விளாசினர். தொடர்ந்து 20 பந்துகளில் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தார். பின்னர் 6வது ஓவரில் ஐதராபாத் பந்துவீச்சாளர் ஃபரூக்கி வீசிய பந்தில் பட்லர் 54 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் - ஜெய்ஸ்வால் இணையும் அதிரடியை தொடர்ந்தது. சஞ்சு சாம்சன் தன்பங்கிற்கு சிக்சரும், பவுண்டரியுமாய் விளாச இன்னொரு பக்கம் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். ஆனால் அரைசதம் அடித்த சில நிமிடங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த தேவ்தத் படிக்கல் 2 ரன்களிலும், ரியான் பராக் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் குறைந்தது.
இருப்பினும் மறுமுனையில் நின்றிருந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் காரணமாக 18 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 186 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான நடராஜன் பந்துவீச அழைக்கப்பட்டார். முதல் இரு பந்துகளில் சிறந்த யார்க்கரை வீசிய நடராஜன், மூன்றாவது பந்தில் சஞ்சு சாம்சனை 55 ரன்களில் வீழ்த்தி அசத்தினார்.
அந்த ஓவரில் நடராஜன் 7 மட்டுமே நடராஜன் விட்டுக் கொடுத்தார். இதனால் ராஜஸ்தான் அணி 200 ரன்களை எட்டுமே என்ற கேள்வி எழுந்தது. பின்னர் ஃபரூக்கி வீசிய கடைசி ஓவரில் ஹெட்மயர் அதிரடியால் ராஜஸ்தான் அணி 10 ரன்கள் சேர்த்தது. இதன் காரணமாக ஐதராபாத் அணி வெற்றிபெற 204 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.