கடைசி 5 ஓவரில் வெறும் 45 ரன்கள்.. 200ஐ கூட எட்டாத பஞ்சாப் அணி.. ராஜஸ்தானுக்கு 198 ரன்கள் இலக்கு!
கவுகாத்தி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற 198 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணி தரப்பில் ஷிகர் தவான் 86* ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 58 ரன்கள் குவித்தனர். அதேபோல் ராஜஸ்தான் அணி தரப்பில் ஹோல்டர் 2 விக்கெட்டுகள வீழ்த்தி அசத்தினார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடைபெற்று வரும் 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக இளம் வீரர் பிரப்சிம்ரன் சிங் - கேப்டன் ஷிகர் தவான் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்த கூட்டணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 64 ரன்கள் குவித்து அசத்தியது. தொடர்ந்து இளம் வீரர் பிரப்சிம்ரன் சிங் 28 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். பின்னர் ஹோல்டர் பந்தில் 60 ரன்கள் எடுத்திருந்த போது பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ராஜபக்சே 1 ரன் எடுத்திருந்த போது காயம் காரணமாக ரிடையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். பின்னர் ஜித்தேஷ் சர்மா - ஷிகர் தவான் கூட்டணி இணைந்து பஞ்சாப் அணியின் ரன் குவிப்பை வேகமாக உயர்த்தியது.
ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான், அடுத்த ஓவரிலேயே கியரை அதிரடிக்கு மாற்றினார். இதன் காரணமாக 36 பந்துகளில் ஷிகர் தவான் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் சர்மா 27 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சிக்கந்தர் ராசா 1 ரன்னில் அஸ்வின் பந்தில் போல்டாகினார். இதனால் பஞ்சாப் அணி 159 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் இறுதி மூன்று ஓவர்களுக்காக தமிழக வீரர் ஷாரூக் கானுடன் தவான் இணைந்தார்.
18 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 19வது ஓவரை வீசுவதற்கு ஆசிஃப் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் ஷிகர் தவான் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாச 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹோல்டர் வீசிய கடைசி ஓவரில் ஷாரூக் கான் 11 ரன்களில் ஆட்டமிழக்க, வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஜோல்டர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications