மும்பை: ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சிவம் மாவி காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக இளம் வீரர் ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசியப் போட்டிகள் தொடர் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்.23ஆம் தேதி முதல் அக்.8ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த ஆசியப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கலந்துகொள்ள பிசிசிஐ அனுமதி அளித்தது. இருப்பினும் அக்.5ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.

அதற்கு முன்பாகவே பயிற்சி போட்டிகளில் இந்திய அணி விளையாட வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் ஆசியப் போட்டிகளுக்காக இளைஞர்கள் கொண்டு புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஏராளமான வீரர்களுக்கு ஆசியப் போட்டிகளுக்கான அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ராகுல் திரிபாதி, அயர்லாந்து தொடரில் அசத்திய ரிங்கு சிங், பஞ்சாப் அணியின் ஜித்தேஷ் சர்மா, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அஹ்மத், ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், இந்திய இளம் வீரர் முகேஷ் குமார், சிஎஸ்கே வீரர் சிவம் துபே, ஆவேஷ் கான், பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக இருந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் சிவம் மாவி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
அதேபோல் மாற்று வீரர்களாக யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஆசியப் போட்டிகளுக்கான அணியில் இருந்து நட்சத்திர இளம் வீரர் சிவம் மாவி காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவருக்கு மாற்றாக ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக நட்சத்திர வீரர் உம்ரான் மாலிக் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ஆகாஷ் தீப் அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் பிசிசிஐ தரப்பில் ஆசியப் போட்டிகளுக்கான ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆசியப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வதற்காக ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், சிவம் துபே உள்ளிட்டோர் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.