கொழும்பு: இந்திய அணியின் நட்சத்திர பவுலரான முகமது சிராஜ் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பவுலிங் பயிற்சியை தொடங்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியில் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஒன்றாக விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா, 8வது வீரராக களமிறங்கும் வீரருக்கு கொஞ்சம் பேட்டிங் திறமையும் இருக்க வேண்டும் என்று முகமது ஷமியை பெஞ்ச் செய்தார். இதன் காரணமாக ஷர்துல் தாக்கூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

இதனால் கோபமடைந்த ஸ்ரீகாந்த், கம்பீர் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள், 7 பேட்ஸ்மேன்களால் சேர்க்க முடியாத ரன்களை, 8வது வீரராக வரும் ஒருவரால் எப்படி சேர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். இந்திய அணி தைரியமாக 5 பேட்ஸ்மேன்கள், 2 ஆல் ரவுண்டர்கள் மற்றும் 4 பவுலர்களுடன் களமிறங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் முகமது ஷமி தொடர்ந்து பெஞ்சிலேயே அமர்ந்திருக்கிறார்.
அதேபோல் இந்திய அணியின் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கும் முகமது சிராஜ் முதற்கொண்டு பேட்டிங் பயிற்சி மேற்கொண்டனர். சில நாட்களுக்கு முன் சிராஜ் பேட்டிங் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியாகின. அதேபோல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் படேலுக்கு கம்பெனி கொடுத்து சிராஜ், கடைசி விக்கெட்டுக்கு சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.
இந்த நிலையில் பவுலர்கள் அனைவரும் பேட்டிங்கிலும் பயிற்சி மேற்கொண்டு வரும் சூழலில், பேட்ஸ்மேன்கள் எப்போது பவுலிங் பயிற்சி மேற்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் டாப் 5ல் இருக்கும் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, இஷான் கிஷன் மற்றும் கேஎல் ராகுல் யாருமே பவுலிங் பற்றி சிந்திக்கவே இல்லை.
ஆசியக் கோப்பை அணி அறிவிக்கப்பட்ட போது, நானும் விராட் கோலியும் ஸ்பின்னர்களாகவும், பார்ட் டைம் பவுலர்களாக செயல்படுவோம் என்று நக்கலாக பதில் அளித்தார். ஆனால் இதுவரை வலைபயிற்சியில் கூட ரோகித் சர்மாவோ, விராட் கோலியோ பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் சிராஜ் பேட்டிங் பயிற்சியை தொடங்கியது போல் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் வங்கதேச அணிக்கு எதிராக குறைந்தபட்சம் 2 ஓவர்களையாவது வீசுவார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.