அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பிறகுதான் செல்ஃபி எடுப்பேன் என்று பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி சபதம் எடுத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி என்றால் அது இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தான். இதுவரை உலகக்கோப்பையில் இந்தியா அணி 7-0 என்று வெற்றிபெற்று பாகிஸ்தான் அணியை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அகமதாபாத்தில் நாளை நடைபெறும் இப்போட்டியில் இந்தியா வெற்றிபெறும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்த தொடரை பொறுத்தவரையில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளுடன் சம பலத்தில் உள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பவுலரான ஷாகின் அப்ரிடி இந்த தொடரில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 2 போட்டிகளில் ஆடி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
குறிப்பாக பவர் பிளேவில் விக்கெட்டுகள் எடுக்காமல் திணறுகிறார். மேலும் சரியான லைன் மற்றும் லெந்திலும், பந்தை நல்ல வேகத்தில் வீசுவதிலும் தடுமாறி வருகிறார். இதனால் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சிற்கு எதிராக பேட்ஸ்மேன்கள் ரன் மழையை பொழிந்து வருகின்றனர். ஆனால் இந்திய அணிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் ஷாகின் அப்ரிடியின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட அவரிடம் செய்தியாளர்கள் சிலர் செல்பி எடுக்க முயன்றனர். அப்போது ஷாகின் அப்ரிடி, இந்தியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய பின் தான் செல்பி கொடுப்பேன் என்று சபதத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். இதன் மூலமாகவே இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு அவர் எப்படி தயாராகி வருகிறார் என்பதை அறிய முடிகிறது.
முன்னதாக 2021 டி20 உலகக்கோப்பையில் ரோகித் ஷர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகளை ஷாகின் அப்ரிடி தான் கைப்பற்றினார். அண்மையில் நடந்த ஆசிய கோப்பை லீக் போட்டியிலும் சிறப்பாகவே பந்துவீசினார். ரோகித் ஷர்மா, கேஎல் ராகுல் இருவரும் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் தடுமாறியதை பார்த்திருப்போம்.
தற்போதைய சூழலில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதனால் நாளைய போட்டியில் இருவருக்குமான போட்டி பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது. ஷாகின் அப்ரிடியின் சபதம் நிறைவேறுமா, நிறைவேறாதா என்பது நாளைய போட்டியில் தெரிந்துவிடும்.