மொஹாலி: ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மீண்டும் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வீரராக வலம் வந்தவர் ஷிகர் தவான். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் வரை இந்திய அணியின் தொடக்க வீரர் என்றால் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தான். அதேபோல் ஐசிசி கிரிக்கெட் தொடர் என்றால், ஷிகர் தவானின் ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். இவரின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது.
ஆனால் இளம் வீரர்களான சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோரின் எழுச்சி காரணமாக ஷிகர் தவான் இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் தலைமையில் தனியாக ஒரு அணி உருவாக்கப்பட்டு இந்திய இளம் வீரர்கள் உருவாகினர். ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 அணி உருவாக்கப்பட்டதோ, அதற்கு முன்பாக ஷிகர் தவான் தலைமையில் ஒருநாள் அணி உருவாக்கப்பட்டது.

ஆனால் டி20 உலகக்கோப்பைக்கு பின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் ஒருநாள் அணிக்கு திரும்பினர். இதனால் சுப்மன் கில்லிடம் தொடக்க வீரருக்கான இடத்தை பறிகொடுத்து ஷிகர் தவான் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் மற்ற வீரர்களை போல் ஷிகர் தவான் யாரையும் குறை சொல்லாமல், நான் தேர்வுக் குழு உறுப்பினராக இருந்தால் கூட சுப்மன் கில்லை தான் தேர்வு செய்வேன் என்று யதார்த்தமாக பேசினார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக தலைமையேற்ற ஷிகர் தவான், கேப்டன்சியில் சொதப்பியதோடு, காயம் காரணமாக பேட்டிங்கில் பெரியளவில் விளையாடவில்லை. அதேபோல் ஐபிஎல் தொடருக்கு பின் நீண்ட நாட்களாக ஷிகர் தவான் ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் ஷிகர் தவான் மீண்டும் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடர் வரவிருக்கும் சூழலில் டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேனுக்கான தேவை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்திய அணியில் மீண்டும் ஷிகர் தவான் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே ஷிகர் தவான் மீண்டும் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐசிசி தொடர் என்றாலே பீஸ்ட் மோடில் விளையாடும் ஷிகர் தவான் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.