லண்டன்: ஓவல் மைதானத்தில் இந்திய அணி ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் மூன்றாவது முறையாக அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். அவரின் அரைசதம் காரணமாக இந்திய அணி 296 ரன்கள் சேர்த்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து இந்தியா அணி தடுமாறிய நிலையில், 3ஆம் நாளின் முதல் ஓவரிலேயே கேஎஸ் பரத் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அஜிங்கியா ரஹானே - ஷர்துல் தாக்கூர் கூட்டணி இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
7வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடிய இந்த கூட்டணி 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ரஹானே 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி சரிவு மீண்டும் தொடங்கியது. இதையடுத்து ஷர்துல் தாக்கூர் அதிரடியை தொடங்கினார். கம்மின்ஸ் வீசிய பந்தில் அடித்த ஸ்ட்ரெய்ட் டிரைவ் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சிறப்பாக ஆடிய அவர், ஓவல் மைதானத்தில் மட்டும் 3வது முறையாக அரைசதம் விளாசினார்.

ஆனால் 51 ரன்கள் எடுத்திருந்த போது ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வந்த ஷமி 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் க்ரீன் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் போலாந்த் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
3ஆம் நாள் ஆட்டத்தில் இன்னும் சுமார் 60 ஓவர்கள் மீதமுள்ள நிலையில், மேலும் 2 நாட்கள் ஆட்டம் உள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸி. அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. ஒருவேளை இந்திய அணி ஆஸி. அணியை 250 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்யும் பட்சத்தில், இந்திய அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய பவுலர்கள், 2வது இன்னிங்ஸில் எப்படி பவுலிங் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.