சென்னை: சென்னை அணியின் இளம் நட்சத்திர வீரர் மதீஷா பதிராணா, இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார். இதனால் அவரின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அண்மை காலமாக சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உச்சரித்த பெயர் மதீஷா பதிராணாவாக தான் இருக்கும். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இன்னும் சொல்லப் போனால் சென்னை அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக உருவெடுத்துள்ள பதிராணா.
ஜூனியர் மலிங்காவாக பார்க்கப்படும் பதிராணாவை, சிஎஸ்கே கேப்டன் தோனியும் பொத்தி பொத்தி பார்த்துக் கொண்டது சென்னை அணி ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனால் சென்னை அணியின் நிரந்தர வீரராக பதிராணா இருக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் பதிராணாவின் குடும்பத்தினருக்கு தோனி அந்த உறுதியை கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பதிராணாவின் கிரிக்கெட் எப்படி வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவையும் சிஎஸ்கே கேப்டன் தோனி பதிராணாவுக்கு வழங்கி இருந்தார். இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பதிராணாவை இலங்கை அணி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வரும் சூழலில், சரியான நேரத்தில் பதிராணாவை இலங்கை அணி பயன்படுத்த தொடங்கியுள்ளது.
டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட பதிராணா, ஒருநாள் போட்டிகளில் எப்படி விளையாடப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மலிங்கா அளவிற்கு வித்தியாசமான பந்துகளை பரிசோதித்து அதனை பயன்படுத்தினால் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் பதிராணாவால் நீண்ட ஆண்டுகளுக்கு விளையாட முடியும். இந்த சோதனையை எப்படி பதிராணா கடக்க போகிறார் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.