சென்னை: ஏசியம் கேம்ஸ் மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து தமிழக வீரர் நடராஜன் தொடர்ந்து தேர்வு செய்யப்படாமல் இருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் நடராஜன். சேலத்தில் இருந்து சென்று சிட்னியில் தனது கொடியை நாட்டி வந்தவர். அதன்பின்னர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

அதன்பின்னர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், ஒருமுறை கூட இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அண்மையில் ஆஷஸ் தொடர் பற்றி தினேஷ் கார்த்திக் பேசுகையில், ஆஷஸ் தொடரின் வர்ணனையாளராக பணியாற்றும் போது ஆஸ்திரேலியா ஜாம்பவான் வீரர்களான ஹெய்டன், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் நடராஜன் ஏன் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்று கேட்பார்கள் என்று கூறினார்.
வெளிநாட்டு வீரர்களே புகழ்ந்து கேட்கும் நடராஜன் இந்திய அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கட்டு வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் பவர் பிளே ஓவர்களில் சில ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தாலும், டெத் ஓவர்களில் யார்க்கர்களை சிறப்பாக வீசினார். இவரின் ஆட்டத்தை பார்த்து பிரையன் லாரா தொடர்ந்து பாராட்டி வந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய அனைத்து வீரர்களும் ஏசியம் கேம்ஸ் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், நடராஜன் மட்டும் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல் சிஎஸ்கே அணி வீரர் தீபக் சஹரும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இருவருமே காயத்தில் இருந்து விடுபட்டு சிறப்பாக விளையாடி வரும் சூழலில், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் மும்பையைச் சேர்ந்த வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா உள்ளிட்டோர் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல் நீண்ட ஆண்டுகளாக காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பிரசித் கிருஷ்ணாவுக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் இடதுகை பந்துவீச்சாளர்களை பட்டை தீட்டி வரும் சூழலில், இந்திய அணி அர்ஷ்தீப் சிங் மட்டுமே நம்பி இருக்கிறது. அதேபோல் நடராஜன் பற்றி தேர்வுக் குழுவில் பரிசீலனை செய்யப்படுகிறதா என்பது குறித்து விளக்கம் கூட அளிக்கப்படவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.