அகமதாபாத்: நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் விளையாடுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தின் பிட்ச் குறித்து பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது. முதல் போட்டியில் டிஃபெண்டிங் சாம்பியனான குஜராத் அணியை எதிர்த்து கம்பேக் கொடுக்க காத்திருக்கும் சென்னை அணி விளையாட உள்ளது.

கடந்த சீசனில் அறிமுகமாகி யாரும் எதிர்பாராத வகையில் கோப்பையை அசால்ட்டாக தட்டிச்சென்ற குஜராத் அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக களமிறங்கியுள்ளது.
கடந்த ஆண்டில் விளையாடிய வீரர்களோடு சேர்த்து சிவம் மாவி, கே.எஸ்.பரத், ஒடியன் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை மினி ஏலத்தில் வாங்கி மேலும் முறுக்கேறி வந்துள்ளது. இந்தப் பக்கம் 4 முறை சாம்பியன்களான சென்னை அணி, பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரஹானே ஆகியோரை வாங்கியுள்ளது. அதேபோல் காயம் காரணமாக கடந்த சீசனில் ஆடாமல் இருந்த தீபக் சஹரும், உச்சக்கட்ட ஃபார்மில் உள்ள ஜடேஜாவும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
சரியாக சொல்ல வேண்டுமென்றால் காட் ஜில்லாவும் கிங் காங்கும் மோதும் போட்டியாக தான் குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆடிய இரு போட்டிகளிலும் குஜராத் அணியிடம் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது. இதனால் முதல் போட்டியிலேயே பதிலடியோடு ஐபிஎல் தொடரை தொடங்குவோம் என்று சென்னை அணி ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.
ஆனால் அப்படி குஜராத் அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது எல்லாம் அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனென்றால் நரேந்திர மோடி மைதானத்தின் பிட்ச் சென்னை அணி பிட்ச் போல் அல்ல. அகமதாபாத் மைதானத்தை பொறுத்தவரையில் கருப்பு மணல், சிகப்பு மணல் இரண்டிலுமே பிட்ச்-கள் உள்ளன. சிகப்பு மணலில் போட்டி நடந்தால் ஸ்பின்னர்களுக்கும், ஸ்லோயர் பந்துகளுக்கும் தான் சாதகமாக இருக்கும். இதுவே கருப்பு மணல் பிட்ச்-ல் நடந்தால் நல்ல பவுன்ஸர் பந்துகளையும் வேகத்தையும் எதிர்பார்க்கலாம்.

இரு பிட்ச்-களிலும் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 160 ரன்களுக்கு மேல் அடிக்க வாய்ப்புகள் உள்ளன. இங்கு பேட்ஸ்மேன் முதலில் நிதானமாக களத்தை புரிந்து ஆட வேண்டும். செட்டில் ஆன பிறகு அதிரடி காட்டலாம். ஆனால் புதிதாக ஒரு பேட்ஸ்மேன் களத்திற்கு வந்து, முதல் பந்திலேயே தூக்கி அடிக்க வேண்டும் என்று நினைத்தால் சற்று கடினமான ஒன்று தான். இதனால் சென்னை அணிக்கு சாதகமாக பார்க்கப்பட்டாலும், குஜராத் அணிக்கே கூடுதல் சாதகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.
ஏனென்றால் குஜராத் அணியின் மைதானத்தை கணக்கில் கொண்டே சுப்மன் கில்லை கடந்த சீசனில் ஒப்பந்தம் செய்தது. அதேபோல் நடப்பு சீசனில் கேன் வில்லியம்சன்னை கொண்டு வந்துள்ளது. இருவருமே ஒரே மாதிரியான அணுகுமுறை கொண்ட பேட்ஸ்மேன்கள். அகமதாபாத் பிட்ச்சில் ஏற்கனவே வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசி இருக்கிறார். இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ள 10 டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 6 போட்டிகளிலும், முதலில் பவுலிங் செய்த அணி ந்4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. முதல் பேட்டிங் சராசரியாக 160 ரன்களும், இரண்டாவது பேட்டிங் சராசரியாக 137 ரன்களும் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விருப்பம் தெரிவிக்க வாய்ப்புகள் உள்ளது.