அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் சென்னை அணி விளையாடி வரும் இறுதிப்போட்டியில் எந்தப் பக்கம் திரும்பினாலும் சிஎஸ்கே ரசிகர்கள் ஜெர்சியுடன் சூழ்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு குஜராத் - சென்னை அணிகள் முன்னேறியுள்ளன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்றிரவு நடக்கவிருந்த நிலையில், அகமதாபாத்தில் திடீரென கனமழை பெய்ததால் ஆட்டம் ரிசர்வ் டேவுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று காலை முதலே அகமதாபாத்தில் மழை பெய்யாததால், ரசிகர்கள் உற்சாகத்துடன் மைதானத்திற்கு வர தொடங்கினர்.

இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. இந்த ஆட்டம் தொடங்கிய பின் எங்கு திரும்பினாலும் மஞ்சள் ஜெர்சி அணிந்த ரசிகர்கள் மட்டுமே உள்ளனர். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான ஒரு லட்சம் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
இதனால் குஜராத் அணிக்கும் அதிகளவில் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கே ரசிகர்கள் தோனிக்காக அகமதாபாத் மைதானத்திலும் குவிந்தனர். கிட்டத்தட்ட மஞ்சள் ஜெர்சியில் உள்ள அனைவரும் தோனியின் ஜெர்சி எண் கொண்ட டி ஷர்ட் அல்லது ஜெர்சி அணிந்தே மைதானத்திற்கு வந்துள்ளனர். இதனால் ஆட்டம் நடப்பது சேப்பாக்கம் மைதானமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
ஏற்கனவே தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி என்று ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வரும் நிலையில், தோனியை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் வெளி மாநிலங்களிலும் இருந்தும் அகமதாபாத் வந்துள்ளனர். இதனிடையே டாஸின் போது தோனியும் ரசிகர்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். தோனி பேசுகையில், நேற்றிரவு மழை பெய்த போது நாங்கள் ஓய்வறையில் தான் இருந்தோம். ஆனால் ரசிகர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்று கூறினார். இது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.