லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் முதல்முறையாக களமிறங்க உள்ளார். ஏற்கனவே தென்னாப்பிரிக்கா யு-19 அணிக்காக உலகக்கோப்பை வெற்றி, எஸ்ஏ20 லீக் தொடர் வெற்றி என்று பல்வேறு வெற்றிகளை கேப்டனாக மார்க்ரம் குவித்துள்ளார்.
ஐபில் தொடரின் இன்றைய லீக் போட்டியில் லக்னோ அணியை ஐதராபாத் அணி எதிர்த்து விளையாடுகிறது. வலிமையான லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் ஐதராபாத் அணி விளையாடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் ஐதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாப்பிரிக்கா வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினமே, தங்கள் அணியுடன் இணைந்துவிட்டனர். முக்கியமாக கேப்டன் எய்டன் மார்க்ரம், கிளாஸன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் மார்கோ யான்சன் ஆகியோர் அத்தனை பிட்ச்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

அதுமட்டுமல்லாமல் ஐதராபாத் அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் முதல்முறையாக களமிறங்க உள்ளார். எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டதே கூடுதல் சுவாரஸ்யம். 2022 சீசனில் டேவிர் வார்னரை கழற்றிவிட்ட ஐதராபாத் நிர்வாகம், நடப்பு சீசனில் கேன் வில்லியம்சனை கழற்றிவிட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக புரூக், கிளாஸன் என்று அறியப்படாத முகங்களை கொண்டு அணியை கட்டமைத்துள்ளது. அதேபோல் கடந்த இரு சீசன்களில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட மார்க்ரமை கேப்டனாக்கியுள்ளது.
மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு அவரது பேட்டிங் மட்டும் காரணமல்ல. ஒரு கேப்டனாக எய்டன் மார்க்ரம் ஏற்கனவே பல்வேறு முறை தனது தலைமையை நிரூபித்து காட்டியுள்ளார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்கா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் இருந்தார். கிரிக்கெட் விளையாட்டில் தென்னாப்பிரிக்கா அணி வென்ற ஒரே உலகக்கோப்பை அதுமட்டும் தான்.

தற்போது தென்னாப்பிரிக்கா அணியின் டி20 தொடருக்கான கேப்டனாக மார்க்ரம் செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் அண்மையில் முடிந்த SAT20 லீக் தொடரின் சாம்பியனாக சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி வெற்றிவாகை சூடியது. அந்த அணிக்கும் எய்டன் மார்க்ரம் தான் கேப்டனாக செயல்பட்டார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கேப்டனாக களமிறங்கும் மார்க்ரமின் வருகையை அத்தனை எளிதில் கடந்துவிட முடியாது.
ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ஷேன் வார்னே, கில்கிறிஸ்ட், பெய்லி, வார்னர் ஆகியோர் தங்களது கேப்டன்ஷிப் திறமையை நிரூபித்துள்ளனர். தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து டூ பிளஸிஸ்-க்கு பின் மார்க்ரம் ஒரு அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.