அகமதாபாத்: ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் அகமதாபாத் விமான விபத்து குறித்து தங்கள் வேதனையை வெளியிட்டு உள்ளனர். அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், இன்று (ஜூன் 12, 2025) மதியம் 2 மணியளவில் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியாவின் AI171 என்ற போயிங் விமானம், 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் புறப்பட்ட நிலையில், விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகர் (Meghani nagar) பகுதியில் வேகமாக உயர்ந்து பின்னர் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தில் இருந்து அடர்ந்த கருப்பு புகை வெளியேறியதுடன், பலத்த வெடி சத்தங்களும் கேட்டன.

விமானத்தில் பயணம் செய்தவர்களில் மிகச்சிலரை தவிர அனைவரும் பலியானதாக அஞ்சப்படுகிறது. மேலும், விமானம் விழுந்த இடத்தில் இருந்தவர்களில் சிலரும் பலியாகி உள்ளனர்.
இந்த அதிர்ச்சிகரமான செய்தியைக் கேட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டோருக்கான வேண்டுதல்களையும் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்தினர்.
சூர்யகுமார் யாதவ்: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராமில் தனது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்: "அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானத்தின் துயரமான விபத்து பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்த அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும். பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு குடியிருப்பாளரின் பாதுகாப்புக்காகவும் வேண்டிக் கொள்கிறேன்."
ஹர்பஜன் சிங்: இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். இந்த அளப்பரிய வேதனையையும், இழப்பையும் தாங்கிக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உரித்தாகுகின்றன. இதுபோன்ற தருணங்களில் வார்த்தைகள் போதாது, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் வலிமையையும், தைரியத்தையும், ஆதரவையும் பெறுவார்கள் என்று நம்புகிறேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்," என பதிவிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா: இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அகமதாபாத்தில் நடந்த கோரமான ஏர் இந்தியா விமான விபத்து குறித்து இரங்கல் தெரிவித்தார். ட்விட்டர் சமூக வலைத்தளத்தில், "அகமதாபாத்தில் நடந்த விபத்து மனதை உடைக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகளும், வலிமையும்," என பதிவிட்டார்.
ரோஹித் சர்மா: இந்திய ஒருநாள் அணி கேப்டனும், உலக கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கப்படும் குரல்களில் ஒருவருமான ரோஹித் சர்மா, அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். "அகமதாபாத்திலிருந்து வந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது; கலக்கத்தை ஏற்படுத்துகிறது. பலியான அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்," என அவர் பதிவிட்டார்.
யூசுப் பதான்: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய லோக்சபா எம்.பி.யுமான யூசுப் பதான், தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த சோகம் நிகழ்ந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். "அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் ஏர் இந்தியா அகமதாபாத்-லண்டன் விமான விபத்து பற்றி கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்கிறேன்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இர்ஃபான் பதான்: யூசுப் பதானின் இளைய சகோதரரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமுமான இர்ஃபான் பதான், "இன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தால் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். பயணிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன்," என்று கூறி உள்ளார்.
யுவராஜ் சிங்: முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் இந்த மனதை உலுக்கும் சம்பவம் குறித்து தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்: "அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து மனதை உடைக்கும் செய்தியாக இருந்தது. பாதிக்கப்பட்ட பயணிகள், பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும். இந்த கடினமான நேரத்தில் அவர்கள் வலிமையைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்." என்று கூறி உள்ளார்.
ரஷீத் கான்: ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் தனது பிரார்த்தனைகளைத் தெரிவித்துள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் அகமதாபாத் நகரை மையமாக கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
முகமது ஷமி: இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து குறித்து தனது துக்கத்தை வெளிப்படுத்தினார். "அனைத்து குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை" என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
துருவ் ஜூரல்: இளம் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் துருவ் ஜூரல், அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து தனது உணர்ச்சிபூர்வமான இரங்கலைத் தெரிவித்தார். ட்விட்டர் சமூக வலைத்தளத்தில், "அகமதாபாத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான விமான விபத்து குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். அனைத்து பயணிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு வலிமை கிடைக்கட்டும்," என பதிவிட்டார்.