லண்டன் : 18 மாதங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு திரும்பியது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக நட்சத்திர வீரர் ரஹானே தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து மோசமாக செயல்பட்டதால் ரஹானே இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
மேலும் நடப்பாண்டில் பிசிசிஐ ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து ரஹானே ஓரங்கட்டப்பட்டார். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக ரஹானே திகழ்ந்தார்.மேலும் உள்ளூர் கிரிக்கெட்டிலும் இரட்டை சதம் எல்லாம் அடித்து ரஹானே நல்ல பார்மில் இருந்தார்.

இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ரஹானே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பிசிசிஐ இணையதளத்திற்கு ரஹானே அளித்த பேட்டியை தற்போது காண்போம். இந்திய அணிக்கு நான் திரும்பவும் வந்தது மிகவும் உணர்ச்சிகரமாக உணர்கிறேன். நான் அணியில் இல்லாத போது என்னுடைய குடும்பத்தினர் மிகவும் துணையாக நின்றார்கள்.
அதன் பிறகு என்னுடைய கிரிக்கெட் யுக்திகளை நான் மாற்றினேன். என்னுடைய உடல் தகுதியை மேம்படுத்தினேன். அதன் பிறகு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் என்னுடைய கவனத்தை செலுத்தினேன். கிரிக்கெட் என்பது என்னுடைய பல நாள் கனவு. ஒவ்வொரு முறையும் களத்தில் இருக்கும்போது அணிக்காக 100% பங்களிப்பை கொடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய தாரக மந்திரம்.
இதனை ஒவ்வொரு போட்டியிலும் நான் செய்தேன். சர்வதேச போட்டியாக இருந்தாலும் சரி ஐபிஎல் இல்லை ரஞ்சிக்கோப்பையாக இருந்தாலும் சரி அணிக்காக நமது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று விளையாடினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி நல்ல பார்மில் இருந்த போது தான் ஐபிஎல் தொடருக்கு வந்தேன். சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்றது மிகவும் ஸ்பெஷல் ஆக உணர்கிறேன்.
இந்த வெற்றி தோனிக்காக நாங்கள் செய்தது. சிஎஸ்கே உடன் என்னுடைய நேரத்தை செலவிட்டதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். இந்திய அணியை அனைத்து கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மா மிகவும் அற்புதமாக வழி நடத்துகிறார். எந்த வகை கிரிக்கெட் ஆக இருந்தாலும் சரி நாங்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அணியின் கலாச்சாரமும் சிறப்பான முறையில் இருக்கிறது. ரோகித் சர்மாவும் ராகுல் டிராவிட்டும் அணியை கையாளுகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கிறோம். இது எங்களுக்கு உறுதுணையாகவும் இருக்கிறது என்று ரஹானே கூறியுள்ளார்.