வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் ரஹானே மூன்று ரன்களில் ஆட்டம் இழந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால், தற்போது சீனியர் வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே புஜாரா அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் விராட் கோலி மற்றும் ரஹானே மீது தான் பார்வைகள் திரும்பி இருந்தன. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து தன்னுடைய இடத்தை காப்பாற்றிக் கொண்டார். இதேபோன்று ஜெய்ஸ்வாலும் அபாரமாக விளையாடி 171 ரன்களை விளாசி அறிமுக டெஸ்டிலே தனது திறமையை நிரூபித்து விட்டார்.
இதேபோன்று விராட் கோலி பயிற்சி ஆட்டத்தில் சொதப்பினாலும், தற்போது நேர்த்தியான டெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி தாம் என்றுமே கிங் தான் என்பதை நிரூபித்து விட்டார். சிறப்பாக விளையாடிய அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் கோலி 76 ரன்களில் கவன குறைவான ஷாட் ஆடி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் விராட் கோலியின் இடமும் காப்பாற்றப்பட்டது. ஆனால் ரகானே மட்டும்தான் தற்போது சிக்கலில் சிக்கிக்கொண்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் 11 பந்துகளில் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்து கேமர் ரூச் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதன் மூலம் ரஹானேவின் இடமும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதால், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்க ரகானேவுக்கு வாய்ப்பு கிடைக்காது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது ரஹானே அரைச்சதம் அடித்தாவது தன்னுடைய இடத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் புஜாராவை போல் ரகானேவும் அதிரடியாக நீக்கப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.