மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக யார் வரப்போகிறார்கள் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. 37 வயதாகி இருக்கும் ரோகித் சர்மா ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
தற்போது ரோகித் சர்மா தன்னுடைய இறுதி சர்வதேச கிரிக்கெட் அத்தியாயத்தில் விளையாடி வருகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி அடுத்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஏறக்குறைய தகுதி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி விட்டு ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ரோகித் சர்மா சென்று விட்டால் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பவுலர்களை டெஸ்ட் கேப்டனாக நியமித்தால் அவர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அது சரி வராது என்ற ஒரு கருத்து தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கரால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ஒரு பேட்ஸ்மேனே கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும். அந்த வகையில் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ரஹானே தான் சரியான நபராக இருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 5077 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 12 சதமும், 26 அரை சதமும் அடங்கும். ரஹானே தலைமையில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை செய்து இருக்கிறது.
தன்னுடைய அனுபவ பேட்டிங் மற்றும் கேப்டன்சி திறமையாலும் ரஹானே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கேப்டனாக சிறப்பாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ரஹானே உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மும்பை அணியின் கேப்டனாக பல கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு இராணி கோப்பையை மும்பை அணி ரஹானே தலைமையில் தான் கைப்பற்றியது.
இதேபோன்று கடந்த சீசன் ரஞ்சி கோப்பையையும் ரஹானே கைப்பற்றி கொடுத்தார். அது மட்டுமல்லாமல் சையது முஸ்தாக் அலி கோப்பை, தியோதர் கோப்பை, துலீப் கோப்பை என அனைத்தையுமே ரஹானே தலைமையிலான அணி வென்று இருக்கிறது. இதனால் ரோகித் சர்மாவுக்கு பிறகு ரஹானே தான் அடுத்த டெஸ்ட் கேப்டனாக வரவேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ரஹானேவுக்கு தற்போது 36 வயதாகிறது. இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரால் கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியும் என்று கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எனினும் ரஹானேவிற்கு பதில் இளம் வீரரான கில்லை கொண்டு வரலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.