இன்னைக்கு ஒரு முடிவு தெரியாம விடமாட்டோம்.. அஜித் அகர்கருக்கு 48 மணி நேர கெடு விதித்த பிசிசிஐ
மும்பை: பிசிசிஐ-க்கும், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கருக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக கடும் பனிப்போர் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் அகர்கரின் தேர்வுக் குழு தலைவர் பதவிக்கான ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் பிசிசிஐ முக்கிய முடிவு எடுக்க உள்ளது.
அகர்கரின் பதவிக்காலம் 2026 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் 2027 ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், தற்போது தேர்வுக் குழு தலைவரை மாற்றுவது அணியின் எதிர்கால திட்டமிடலைப் பாதிக்கும் என்பதால் பிசிசிஐ அதிகாரிகள் அவருடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

மூத்த வீரர் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த முரண்பட்ட தகவல்களே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்து தொடரின் போது, 2027 உலகக் கோப்பை திட்டத்தில் ரோஹித் சர்மா இல்லை என்று தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் கடும் அதிருப்தியடைந்த ரோஹித் சர்மா பிசிசிஐ உயர் அதிகாரிகளிடம் முறையிட்டதாகவும் தெரிகிறது.
ஆனால், தேர்வுக்குழுவின் கருத்துக்கு மாறாக, ரோஹித் சர்மா தொடர்ந்து இந்திய அணியில் முக்கியமான வீரராக நீடிப்பார் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பகிரங்கமாக அறிவித்தார். பிசிசிஐ-க்கும், தேர்வுக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றியதால், பிசிசிஐ நடத்திய முக்கிய ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்து அகர்கர் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார்.
இந்த விரிசல்களைச் சரிசெய்து, புதிய ஒப்பந்த நீட்டிப்புக்கான பணிகளை மேற்கொள்ள அடுத்த 48 மணி நேரத்தில் அகர்கருடன் பிசிசிஐ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனையின் முடிவிலேயே அகர்கர் தனது பதவியில் நீடிப்பாரா அல்லது புதிய தேர்வுக் குழு தலைவர் நியமிக்கப்படுவாரா என்பது உறுதியாகும்.
இந்த பேச்சுவார்த்தையில் 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வரையில் அஜித் அகர்கரின் எதிர்கால திட்டம் என்ன? மூத்த வீரர்கள் குறித்த அவரது நிலைப்பாடு, கேப்டன் தேர்வு மற்றும் உலகக்கோப்பை வியூகம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அணியின் முக்கிய முடிவுகளில் அவரது நிலைப்பாடை தெரிந்து கொண்ட பின் பிசிசிஐ உயர் அதிகாரிகள் அவரை தொடர்ந்து தேர்வுக் குழு தலைவராக இருக்க அனுமதிக்கலாமா? என்ற முடிவை எடுப்பார்கள்.


Click it and Unblock the Notifications


