பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் விலகுவதற்கு தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் திடீரென வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டார். இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருடன் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கான பயணமாக பார்க்கப்பட்டது.

டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்கள் ஒருநாள் தொடருக்கான பயிற்சியை தொடங்கினர். இந்த பயிற்சியின் போது ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருடன் அஜித் அகர்கர் தொடர்ந்து பேசி வந்தார். பயிற்சி களத்தில் தேர்வு குழு தலைவர் இருந்த புகைப்படம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை தலைகீழ் மாற்றம் பெற்றது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 7 மற்றும் 8 ஆகிய இடங்களில் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இளம் வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பிம் போதுமானதாக இல்லை.
அதேபோல் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விலகி கொண்டனர். இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையேற்றார். இவர்கள் இருவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் படேல் கொண்டு இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 90 ரன்களில் எட்டிய பின் அடுத்தடுத்து சரிவை கண்டு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதிலும் 4வது பேட்ஸ்மேனாக அக்சர் படேல் களமிறங்கியது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விலகியதற்கு அஜித் அகர்கர் உடனான ஆலோசனையே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பைத் தொடருக்கான அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடங்கள் உறுதியான நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் அஜித் அகர்கர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.