டெல்லி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் இருபெரும் தூண்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் திடீர் ஓய்வு, இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் ஒரு விவாதப் பொருளாகவே உள்ளது. குறிப்பாக, இங்கிலாந்து தொடர் மீது தான் ஆர்வமாக இருப்பதாக ரோஹித் சர்மா ஓய்வுக்கு சில வாரங்களுக்கு முன்பு பதிவிட்டது, இந்த விவகாரத்தில் மேலும் மர்மத்தைச் சேர்த்தது. இந்த நிலையில், பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், "நாங்கள் அவர்களை இங்கிலாந்து தொடரில் சேர்க்க விரும்பினோம்" என்று ஒரு 'குண்டை' தூக்கிப் போட்டுள்ளார்.
என்டிடிவி-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அஜித் அகர்கர் இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்தார். "அவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் தூண்கள்," என்று தொடங்கிய அகர்கர், "புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சி தொடங்குவதால், இதுவே விலகுவதற்குச் சரியான நேரம் என்று அவர்கள் இருவரும் உணர்ந்தார்கள். மக்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம், ஆனால் அதுதான் யதார்த்தம். ஒருவேளை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டெஸ்ட் வீரர்களாக அந்த WTC சுழற்சியில் தங்களால் தொடர முடியாது என்பதை அவர்கள் இருவரும் நன்கு அறிந்திருந்தனர்," என்று கோலி மற்றும் ரோஹித்தின் ஓய்வு, அவர்களின் தனிப்பட்ட முடிவு என்பதைத் தெளிவுபடுத்தினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தாலும், மீண்டு வந்து தொடரை 2-2 என சமன் செய்து சரித்திரம் படைத்தது. இளம் வீரர்களின் இந்தச் செயல்பாடு பாராட்டப்பட்டாலும், கோலி மற்றும் ரோஹித்தின் அனுபவம் சில முக்கியமான தருணங்களில் தேவைப்பட்டது என்பதை அகர்கர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஆம், இங்கிலாந்து தொடரில் எங்களுக்குச் சில அனுபவங்கள் தேவைப்பட்டன. நாங்கள் தொடரை வெல்லாவிட்டாலும், இளம் கேப்டனின் கீழ் எங்கள் செயல்பாடு அற்புதமாக இருந்தது. ஆனாலும், சில அனுபவமிக்க வீரர்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.
"அவர்களின் ஓய்வு முடிவை மாற்ற நாங்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றோமா?" என்ற கேள்விக்கு, அகர்கர் மர்மமான ஒரு புன்னகையுடன், "அதை நான் எனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறேன்" என்று பதிலளித்தார். அவரது இந்தப் பதில், திரைக்குப் பின்னால் சில பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கலாம் என்ற ஊகங்களுக்கு மீண்டும் வலு சேர்த்துள்ளது.
ஓய்வு பெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு, இங்கிலாந்து தொடர் குறித்து ரோஹித் சர்மா ஆர்வமாகப் பதிவிட்டது குறித்துக் கேட்டபோது, அகர்கர் முகத்தில் அறைந்தாற்போல் பதிலளித்தார். "நான் அவரது சமூக வலைதளப் பதிவுகளைப் படிக்கவில்லை. நான் வழக்கமாக வீரர்களிடம் நேரடியாகப் பேசுவேன். அதனால், அதுபற்றி எனக்குத் தெரியாது" என்றார்.
"ஓய்வு பெற்ற வீரர்களைப் பற்றிப் பேசுவதை விட, இங்கிலாந்துக்குச் சென்று, யாரும் எதிர்பார்க்காத நிலையில் தொடரை சமன் செய்த தற்போதைய அணியின் செயல்பாடுகளில் நாம் ஏன் கவனம் செலுத்தக் கூடாது?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.
இறுதியாக, அணியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துப் பேசிய அகர்கர், "ஒரு சீனியர் வீரர் ஓய்வு பெறுவதோ, நீக்கப்படுவதோ இது முதல் முறையல்ல. 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரு ஜாம்பவானே (சச்சின்) இப்போது விளையாடுவதில்லை. விளையாட்டின் இயல்பே அதுதான்; மாற்றம் என்பது இயற்கையானது. அது அணியின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும், அதுதான் எங்கள் வேலை" என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
கோலி மற்றும் ரோஹித்தின் ஓய்வு, தேர்வாளர்களின் முடிவல்ல, அது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்பதை அஜித் அகர்கரின் இந்தப் பேட்டி விளக்கியுள்ளது. ஆனால், அதுமட்டும் தான் உண்மையா? திரைமறைவில் நடந்தது என்ன? என்ற கேள்விகளும் உள்ளன.