மும்பை: ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், உலகக்கோப்பைக்கும் அவர் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பைத் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இருந்து தான் உலகக்கோப்பைத் தொடருக்கான அணி தேர்வு செய்யப்பட உள்ளது. ஆனால் உலகக்கோப்பைத் தொடருக்கு 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால், இரு வீரர்களை நீக்கப்படும் நிலை உருவாகும்.

இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 173 ரன்கள் குவித்த திலக் வர்மா இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் வருகையால் சஞ்சு சாம்சன் மாற்று வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டதற்கு அவர் மிடில் ஆர்டர் வீரர் என்பதும், அவரால் 4 முதல் 5 ஓவர்கள் வரை பந்துவீச முடியும் என்பது முக்கியக் காரணம்.
அதுமட்டுமல்லாமல் மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் இருப்பதால், என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது ரசிகர்களுக்கு உட்பட அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே திலக் வர்மாவை நேரடியாக ஆசியக் கோப்பை ஒருநாள் தொடரில் இந்திய அணி அறிமுகம் செய்யவுள்ளது. இத்தனை காரணங்கள் இருப்பதால் திலக் வர்மா உலகக்கோப்பைக்கான இந்திய அணி திட்டத்தில் இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் திலக் வர்மா தேர்வு குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் பேசுகையில், திலக் வர்மா அபாரமான திறமையை வெளிப்படுத்தி அனைவரின் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார். ஆசியக் கோப்பைக்கு 17 வீரர்களை தேர்வு செய்ய முடியும் என்பதால் அவரையும் தேர்வு செய்துள்ளோம். இந்திய அணியுடன் இருப்பதற்கு இது அவருக்கு நல்ல வாய்ப்பு.
ஒருவேளை நீங்கள் கேட்பது போல் திலக் வர்மா உலகக்கோப்பைக்கான திட்டத்தில் இருந்தால், ஆசியப் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டிருக்க மாட்டார். ஆசியக் கோப்பை அவருக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆசியக் கோப்பைத் தொடரின் போது கால்களை விட்டு ஆழம் பார்ப்பது போல், திலக் வர்மாவை மிடில் ஆர்டரில் இந்திய அணி பரிசோதிக்கும் என்று பார்க்கப்படுகிறது.