பிர்மிங்ஹாம்: இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆடிய இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்குப் பதிலாக வேறு இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் அடுத்த போட்டியில் இடம்பெறப் போவதாகக் கூறப்படுகிறது.
மூத்த வீரரான ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது போட்டியில் ஓய்வு எடுக்கப் போகிறார் என முதற்கட்ட தகவல் வெளியானது. முதல் போட்டியில் சொதப்பிய பிரசித் கிருஷ்ணா இரண்டாவது போட்டியில் நீக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுடன் கௌதம் கம்பீர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அந்த இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆவர்.

ஆகாஷ் தீப், இந்திய மண்ணில் நடைபெற்ற வங்கதேச டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாகவே பந்துவீசி இருந்தார். ஆனால், அவருக்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இந்திய டி20 அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் அர்ஷ்தீப் சிங்குக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்பதால், இந்திய அணியின் பந்துவீச்சில் அவர் நிச்சயம் புதிய மாற்றத்தை அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது.
இவர்கள் இருவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ள பிரிமிங்ஹாம் மைதானத்தில் நடந்த பயிற்சியின் போது நீண்ட நேரம் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் பேசிக் கொண்டிருந்தனர். இதன் மூலம் அவர்கள் இருவரும் இரண்டாவது போட்டியில் ஆடுவது உறுதி என்ற பேச்சு எழுந்துள்ளது. இது குறித்து விரைவில் இந்திய அணி சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்.
பும்ரா இல்லாத இடைவெளியை இவர்கள் இருவரும் நிரப்ப வேண்டும் என்பதே இந்திய அணி நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கும். பிரசித் கிருஷ்ணா விக்கெட் வீழ்த்தினாலும் அதிக ரன்களை கொடுத்தது அவருக்கு எதிராக அமைந்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் அடுத்து வரும் போட்டிகளை வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது இந்திய அணி. எனவே, பிரசித் கிருஷ்ணாவுக்கு மேலும் வாய்ப்புகளை வழங்குவது இந்திய அணிக்கு பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்.