மெல்போர்ன்: இந்திய வீரர் ரோகித் ஷர்மாவுக்கு தவறான தீர்ப்பு மூலம் வாழ்வளித்துவிட்டார் கள நடுவர் அலிம்தார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்திய அணி 39.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களுடன் நிதானமாக ஆடிக் கொண்டிருந்த தருணம் அது. ரோகித் ஷர்மா அடித்து ஆட முற்பட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான், வேகப் பந்து வீச்சாளர் ருபேல் புல்டாஸ் ஒன்றை வீசினார். அதை ரோகித் இடதுபுறமாக இழுத்து அடிக்க, அந்த பந்து பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனது.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படி கேட்ச் கொடுத்து விட்டாரே என்று இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், செட்டில் ஆன பேட்ஸ்மேன் அவர்தான் என்பதால், ரன் ரேட் வீழ்ச்சியடைந்துவிடுமே என்ற அச்சமும் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

ஆனால், லெக் அம்பயர் அலிம்தார் ஆபத்பாண்டவராக இந்தியாவுக்கு கை கொடுத்தார். ஆம்.. அந்த பந்து இடுப்புக்கு மேலே உயரமாக வந்த புல்டாஸ். எனவே அது நோபால் என்று கள நடுவருக்கு சமிக்ஞை செய்தார். கள நடுவர் இயான் கவுல்ட் அதை ஏற்று நோபால் என அறிவித்தார்.
நோபாலில் பிடிபட்ட கேட்ச் என்பதால், ரோகித் நாட்-அவுட் என அறிவிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரோகித் ஷர்மா சதம் எடுத்து அசத்தினார். சதம் அடித்த பிறகுதான் அதிரடியாக ஆடத் தொடங்கி, சிக்சரும், பவுண்டரியுமாக பறக்கவும் விட்டார். மொத்தத்தில் 137 ரன்களை குவித்த ரோகித் ஷர்மா, தஸ்கின் பந்து வீச்சில் பௌல்ட் ஆகி அவுட் ஆனார். ஆனால் ரோகித் ஷர்மாவின் ரன் குவிப்புதான், ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
இந்நிலையில், அலிம்தார் மீது, லட்சுமணன், வார்னே போன்ற பல்வேறு முன்னாள் வீரர்களும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர். ரோகித் ஷர்மா 90 ரன்களுக்கு பிறகு கூடுதலாக எடுத்த 47 ரன்களையும் அலிம்தார்தான் ஸ்கோர் செய்தார் என்று வறுக்கின்றனர் வலைவாசிகள்.