மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களுடைய பயிற்சி முகாமை மார்ச் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறார்கள். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் மார்ச் 24ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் முழு கவனமும் மும்பை இந்தியன்ஸ் அணி மீது ரசிகர்களின் கண்கள் திரும்பி இருக்கிறது. இதற்கு காரணம் குஜராத் அணியிலிருந்து மும்பைக்கு வந்த ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியை பெற்றதுதான்.

இதனால் ஐந்து முறை கோப்பையை வாங்கி தந்த ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்தின் மீது ரோகித் சர்மாவும் அவருடைய ரசிகர்களும் கடும் ஆத்திரத்தில் இருந்தனர். இதே போன்று ஹர்திக் பாண்டியாவுக்கு இதுவரை ரோகித் சர்மா ஒரு முறை கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.
மேலும் தங்களுடைய அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாகவே ரோகித் சர்மா குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி அணியில் பிரச்சனை இருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணியால் எவ்வாறு சரியாக செயல்பட முடியும் என்பதை உணர்ந்த அம்பானி குடும்பத்தினர் இந்த பிரச்சனையை சரிசெய்ய காய் நகர்த்தி வருகிறார்கள்.
தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கான முந்தைய நிகழ்ச்சிகள் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் தொழிலதிபர்கள் எல்லாம் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ரோகித் சர்மாவும் வந்திருக்கிறார்.
இதன் மூலம் அம்பானி குடும்பத்தினர் மீது ரோகித்தின் கோபம் தணிந்து இருக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் பங்கேற்கும் போது அவர்களுக்குள்ள பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தர அம்பானி குடும்பத்தினர் முடிவு செய்கிறார்கள்.
மேலும் முகேஷ் அம்பானி மற்றும் நீதான் அம்பானி ஆகியோர் ரோகித் சர்மாவுடன் கேப்டன்ஷிப் விவகாரத்தில் பேசி சுமுக முடிவை ஏற்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள். முகேஷ் அம்பானியே தனிப்பட்ட முறையில் அழைத்ததன் பேரில் தான் ரோகித் சர்மா குடும்பத்தினர் தற்போது காஷ்மீருக்கு வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பிசினஸ்மேனுக்கு தன்னுடைய வியாபாரத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அதனை எப்படி தீர்க்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும். அதேபோல் ரோகித் சர்மா ஹர்திக் பிரச்சனையும் முகேஷ் அம்பானி தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவார் என்று மும்பை அணி ரசிகர்கள் நம்புகின்றனர். இதனால் கண்கள் பணித்தன இதயம் இனித்தது போன்ற ஒரு வீடியோவை ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மா இடையே நாம் எதிர்பார்க்கலாம்.