லண்டன்: சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரும் கௌரவம் அளிக்கும் வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு 'ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி' என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிமுக விழா இன்று லண்டனில் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் இங்கிலாந்து வேகப்பந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதற்கு முன் இந்த கோப்பை பட்டோடி டிராபி என அழைக்கப்பட்டது. இந்த நிலையில், பட்டோடியின் பெயரை நீக்குவது குறித்து பல்வேறு சர்ச்சைகளும் நீடித்து வந்தன. இந்திய அணிக்கு பட்டோடி குடும்பத்தின் இரண்டு பேர் கேப்டனாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்திகார் அலிகான் பட்டோடி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். அடுத்து அவரது மகன் மன்சூர் அலிகான் பட்டோடி இந்திய அணியின் கேப்டனாக விளையாடியிருக்கிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக இப்திகார் அலிகான் பட்டோடி விளையாடியவர் என்பதால்தான் பட்டோடி டிராபி என இரு அணிகளுக்கும் பொதுவான அவரது பெயர் இத்தனை காலம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அதை மாற்றி இனி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை 'ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி' என அழைக்க முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் பட்டோடியின் பெயர் நீக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது அவரது பெயர் நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது பெயரை வைத்தது பற்றி சச்சின் டெண்டுல்கர் விளக்கம் அளித்துள்ளார்.
பட்டோடியின் பெயரை நீக்குவதற்கு முன் தன்னிடம் யாரும் எதுவும் சொல்லவில்லை எனவும், அவரது பெயரை நீக்கும் முடிவை எடுத்த பிறகு பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு தன்னிடம் அது பற்றிப் பேசியதாகவும் சச்சின் கூறியுள்ளார்.
பட்டோடியின் குடும்பத்தினருடன் தான் பேசியதற்குப் பிறகு, பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு மற்றும் ஜெய் ஷா ஆகியோருடன் தான் பேசி, பட்டோடியின் புகழுக்குச் சற்றும் குறைவு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை அடுத்துதான் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவில் வெற்றி பெற்ற அணியின் கேப்டனுக்கு பட்டோடியின் பெயரில் விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.