ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தன்னை 'வெளியே தள்ளியதாக' வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார். தன்னை ஒரு ஒயிட்-பால் (White-ball) ஸ்பெஷலிஸ்ட்டாக வகைப்படுத்தியதால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ரஸ்ஸல், டெஸ்ட் கிரிக்கெட்டை எப்போதும் நம்புவதாகவும், டெஸ்ட் போட்டிகளில் தேர்வாகும் வாய்ப்பு இருந்தவரை அதை ஒருபோதும் கைவிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

ரஸ்ஸல் தனது டெஸ்ட் அறிமுகத்தை, மற்ற வடிவங்களுக்கு முன்பே பெற்றார். 2010 ஆம் ஆண்டு காலேயில் இலங்கைக்கு எதிராக அறிமுகம் ஆனார். அந்தப் போட்டியில் 2 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதன் பிறகு அவர் மீண்டும் சிவப்புப் பந்து (Red-ball) சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை.
ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் சிறப்புப் பந்துவீச்சாளராகவும், இறுதியில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு லீக்குகளில் விளையாடும் ஒரு ஃபிரீலான்சர் (freelancer) ஆகவும் மாறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸின் டி20ஐ தொடர் சனிக்கிழமை தொடங்கியுள்ள நிலையில், 'தி கார்டியன்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரஸ்ஸல், "நான் டெஸ்ட் கிரிக்கெட்டை நம்புகிறேன், ஆனால் இறுதியில் நான் ஒரு தொழில்முறை வீரர். அது எனது பயணத்தின் ஒரு பகுதியாக இல்லை. அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஏனென்றால் நான் அதைத் திரும்பிப் பார்க்கவில்லை... டெஸ்ட் அணியிலிருந்து நான் வெளியே தள்ளப்பட்டேன். அவர்கள் (வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அமைப்பு) என்னை ஒரு ஒயிட்-பால் வீரராகவே பார்த்தார்கள், அவ்வளவுதான்" என்று கூறினார்.
சமீபத்தில் முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற விராட் கோலி அந்த வெற்றி டெஸ்ட் கிரிக்கெட்டை விட 'ஐந்து மடங்கு குறைவு' என்று கூறியது குறித்து கேட்டபோது, வெஸ்ட் இண்டீஸைப் பொறுத்தவரை இது அப்படி இல்லை என்று ரஸ்ஸல் குறிப்பிட்டார். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிப்பதற்குக் காரணம், அது அவர்களுக்கு நல்ல ஊதியத்தை வழங்கி, வசதியான வாழ்க்கையை வாழ அனுமதிப்பதே என்றார்.
"நீங்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து வருகிறீர்கள் என்றால், அங்கு டெஸ்ட் வீரர்களை அவர்கள் நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள். அது வெஸ்ட் இண்டீஸில் இது முற்றிலும் வேறுபட்டது. அந்த வீரர்கள் (இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து) டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவும், மிகப்பெரிய போட்டிகளில் பங்கேற்கவும் லாபகரமான ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள். அதனால் நிச்சயமாக அவர்கள் டெஸ்ட் விளையாட விரும்புவார்கள். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நிலை? வெஸ்ட் இண்டீஸில் 50 அல்லது 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடலாம், ஆனால் நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு, உங்களிடம் அதிக பணம் இருக்காது. நிச்சயமாக, நீங்கள் ஒரு வசதியான வாழ்க்கையை வாழவும், உங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளவும் விரும்புவீர்கள்," என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை விடுத்து டி20 லீக்குகளில் விளையாடுவதன் நன்மைகளை ரஸ்ஸல் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்துகள், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக நிலவி வரும் டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் மற்றும் வீரர்களின் தேர்வு தொடர்பான பிரச்சினைகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.