மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரோஹித் சர்மா, ஒரு இளம் ரசிகருக்காகப் பாதுகாப்பு அதிகாரியிடம் கடுமையாகக் கோபப்பட்ட சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தனது ரசிகருக்காக பேசிய ரோஹித் சர்மாவின் குணத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்குத் தயாராகும் வகையில், ரோஹித் சர்மா மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரைப் பார்ப்பதற்கு தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று பயிற்சியை முடித்துவிட்டு ரோஹித் சர்மா மைதானத்திலிருந்து வெளியேற முயன்றபோது, அவரைக் காணவும், அவரிடம் ஆட்டோகிராஃப் பெறவும் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. அப்போது, ஒரு சிறுவன் மிகுந்த ஆர்வத்துடன் ரோஹித் சர்மாவை நெருங்க முயன்றுள்ளான். ஆனால், பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரி ஒருவர், அந்தச் சிறுவனைச் சற்று கடுமையாகத் தடுத்து நிறுத்தினார்.

இதைக் கண்ட ரோஹித் சர்மா, உடனடியாகத் தனது நிதானத்தை இழந்தார். அந்தப் பாதுகாப்பு அதிகாரி மீது கடும் கோபம் கொண்ட அவர், அவரை நோக்கிச் சீறிப் பாய்ந்தார். "ஏன் அந்தச் சிறுவனை அப்படித் தடுக்கிறீர்கள்? அவனை வர விடுங்கள்" என்பது போலக் கடுமையாகக் கண்டித்ததோடு, அந்த அதிகாரிக்குத் தனது அதிருப்தியைத் தீவிரமாக வெளிப்படுத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வீடியோவில், ரோஹித் சர்மா கோபத்துடன் பாதுகாப்பு அதிகாரியை நோக்கிக் கையை நீட்டிப் பேசுவதும், பின்னர் அந்தச் சிறுவனைத் தன்னிடம் வர அனுமதிக்குமாறு கூறுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும், "ரோஹித் உண்மையிலேயே அன்பான உள்ளம் கொண்டவர்" என்று பாராட்டி வருகின்றனர்.
ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், ரோஹித் சர்மாவின் நெருங்கிய நண்பரும், முன்னாள் இந்திய உதவிப் பயிற்சியாளருமான அபிஷேக் நாயர், ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். ரோஹித் மைதானத்தை விட்டு வெளியேறியபோது, "யாரும் தள்ளாதீர்கள், நாம் எல்லோரும் ரசிகர்கள் தான், ஆனால் அவருக்கு அடிபட்டுவிடக் கூடாது," என்று அவர் கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார். இதுவே, அங்கு நிலவிய சூழலின் தீவிரத்தை உணர்த்தியது.
ஒருபக்கம் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற பெரும் ரசிகர் கூட்டம் கொண்ட மூத்த வீரர்களை அணியில் இருந்து நீக்குவதில் பிசிசிஐ குறியாக உள்ளது. இந்திய டெஸ்ட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆள் இல்லாத காலி மைதானத்தில் சர்வதேச போட்டியில் ஆடிக் கொண்டு இருக்க, மறுபுறம் ரோஹித் சர்மா பயிற்சி செய்தால் கூட அவரை பார்ப்பதற்கு பெரும் கூட்டம் வருகிறது. இந்த முரணையும் பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.