லண்டன்: ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி டாப் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருவது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா உள்ளிட்டோரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பியுள்ளனர். கடைசி நாளில் 280 ரன்கள் விளாசினால் வெற்றி என்ற நிலையில், நேற்று 44 ரன்களுடன் இருந்த விராட் கோலி மேலும் 5 ரன்களை மட்டும் அடித்துவிட்டு ஆட்டமிழந்தார். அதேபோல் நேற்றைய நாள் ஆட்டத்திலும் புஜாரா 27 ரன்களுடனும், ரோகித் சர்மா 41 ரன்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

முக்கியமான போட்டிகளில் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த டாப் மற்றும் மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்புவது வாடிக்கையாகிவிட்டது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தொடங்கிய சறுக்கல், இரு டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் தொடர்ந்து, தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரைக்கும் வந்துவிட்டது. கடந்த டி20 உலகக்கோப்பையை தவிர்த்து அனைத்து முக்கியப் போட்டிகளிலும் இந்திய அணியின் தோல்விக்கு டாப் ஆர்டர் சொதப்பல்களே காரணமாக அமைந்துள்ளது.
டாப் ஆர்டரில் விளையாடும் ரோகித் சர்மா கேப்டன் என்பதாலேயே இந்திய டெஸ்ட் அணியில் நீடித்து வருகிறார். உள்ளூரில் புலியாக இருக்கும் ரோகித் சர்மா, வெளிநாடுகளில் எலியாக மாறிவிடுகிறார். கடந்த 4 ஆண்டுகளாக புஜாராவின் பேட்டிங் சராசரி 30க்கும் கீழ் உள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக மட்டும் ஒரேயொரு சதத்தை விளாசியுள்ளார். விராட் கோலி வழக்கம் போல் 40 ரன்களை விளாசி முக்கியமான போட்டிகளில் வெளியேறுவதை தொடர்ந்து வருகிறார்.
ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா ஆகியோரை எடுத்துவிட்டால் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறார்கள். டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரில் உள்ள வீரர்கள் தொடருக்கு ஒரு அரைசதமோ அல்லது சதமோ விளாசிவிட்டு அணியில் தொடர்வதை வழக்கமாகி வைத்துள்ளார். இதனால் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இளம் வீரர்களை தயார் செய்வதோடு, டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.