ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் பேட்டிங் அசத்தலாக அமைந்தது.

பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சிராஜ் பட்டையை கிளப்பினார்கள். இந்த நிலையில் நாளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இதனையொட்டி இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அதில் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா, டோமினிக்கா பிட்சை பார்த்த போது எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை.
ஆனால் இந்த பிட்சில் பொறுத்தவரை தெளிவில்லாமல் இருக்கிறோம். அதேபோல் மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இந்திய பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் அடுத்த 5 நாட்களில் பிட்சில் என்ன மாற்றம் நடக்கும், வானிலை மாற்றம் அனைத்தையும் கணக்கிட்டே முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ரஹானே உள்ளிட்ட அனைவரும் 34 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கிறீர்கள். இதனால் இந்திய அணி மாற்றமடைவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, மாற்றங்கள் இன்றோ அல்லது நாளையோ நிச்சயம் நடக்க வேண்டும். ஆனால் அணிக்குள் வரும் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்திய அணிக்குள் வரும் இளம் வீரர்களுக்கு சரியான ரோலை கொடுக்க வேண்டும், அதேபோல் எந்த ரோலில் எப்படி செயல்பட வேண்டும் என்ற தெளிவையும் நாங்கள் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எப்படி தயாராகி விளையாடுகிறார்கள் என்பது அவரவர் கைகளில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.