மும்பை: 2007ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் இந்திய கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது, புதிய கேப்டனாக எம்எஸ் தோனியை தேர்வு செய்வதற்கான காரணம் குறித்து இந்திய முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2007ஆம் ஆண்டு சோதனையான காலகட்டம் என்றே கூறலாம். ஆனால் அந்த நேரத்திலும் ஏராளமான புதிய இந்திய வீரர்களை கிரேக் சேப்பல் கொண்டு வந்தார். 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு, 2007ஆம் ஆண்டு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது. இதனால் இந்திய கேப்டன் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்க சச்சின் டெண்டுல்கரிடம் பேசிய போது, சச்சின் டெண்டுல்கர் ஏற்க மறுத்த, தோனியை பரிந்துரை செய்தார். அப்போது இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக இருந்தவர் முன்னாள் ஜாம்பவான் வீரர் திலீப் வெங்சர்கார். இவர் யுவராஜ். சேவாக், ஹர்பஜங் சிங் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இருந்த போது தோனி கேப்டனாக நியமித்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
அதில் திலீப் வெங்சர்கார் கூறுகையில், சச்சின் டெண்டுல்கரின் பரிந்துரை தவிர்த்து தோனியை டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக நியமித்ததற்கு காரணம் அவரின் தலைமை பண்புதான். விக்கெட் கீப்பர் என்பதால் தோனியிடம் கிரிக்கெட் பற்றி புரிதல் அதிகமாக இருந்தது. அவரின் உடல்மொழியும், அணியை முன்னணியில் இருந்து வழிநடத்தும் திறன் ஆகியவையும் தோனியிடம் கண்டறிந்தோம்.
அதேபோல் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்களிடம் தோனி உரையாடிய விதமும் எங்களை ஈர்த்தது. அதன் காரணமாகவே தோனியை கேப்டனாக தேர்வுக் குழு நியமனம் செய்தது என்று தெரிவித்தார். தோனி கேப்டன்சியின் கீழ் தான் இந்திய அணி டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என்று 3 ஐசிசி கோப்பையையும் வென்று அசத்தியது. அதன்பின்னர் இந்திய அணி பங்கேற்ற 9 ஐசிசி தொடர்களிலும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.