அகமதாபாத்: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள கலைநிகழ்ச்சிகளில் பாடவுள்ள நட்சத்திர பாடகர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. 1.32 லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அகமதாபாத் மைதானத்தில் இரு நட்சத்திர அணிகளும் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை களத்திலேயே திருவிழாவாக மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதாவது இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக கலை நிகழ்ச்சிகளுக்கு பிசிசிஐ தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த கலை நிகழ்ச்சிகள் ஆட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்பாக தொடங்கவுள்ளது. சரியாக மதியம் 12.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் தொடங்கவுள்ளது. இதில் நட்சத்திர பாடகர்களான அர்ஜித் சிங், சுக்விந்தர் சிங், சுனிதி சவுகான், ஷங்கர் மகாதேவன் மற்றும் பாடகி நேஹா கக்கர் ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடவுள்ளனர்.
அதேபோல் நடன கலைஞர்களின் நடனமும் மைதானம் மற்றும் அரங்குகளில் நடக்கவுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் நேரில் வரவுள்ளனர். அதேபோல் பாலிவுட் நடிகர், நடிகைகளும் நிச்சயம் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அகமதாபாத் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் காலை 10 மணி முதலே அனைத்து நுழைவு வாயில்கள் மூலமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் தண்ணீர் வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. இதனால் டிக்கெட்டை வாங்கியுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் செல்ஃபோன், தொப்பி உள்ளிட்டவை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.