மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயம் முடிவடைந்துள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம். ஐபிஎல் தொடர், உள்ளூர் கிரிக்கெட் உள்ளிட்டவை மூலம் கணிசமான வருவாயை ஈட்டி வரும் அர்ஜுன் டெண்டுல்கர், கிரிக்கெட் அகாடமி மூலமாகவும் வருவாய் ஈட்டி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளான சானியா சந்தோக் ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. மும்பையைச் சேர்ந்த காண்ட்டினண்டல் ஹோட்டல் அதிபரும், ப்ரூக்ளின் ஐஸ் க்ரீம் நிறுவன உரிமையாளரின் மகள் சானியாவை அர்ஜுன் டெண்டுல்கர் மணம் முடிக்கவுள்ளார்.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் இரு குடும்பங்களின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. 25 வயதாகும் சச்சின் டெண்டுல்கர், தற்போது கிரிக்கெட்டில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அவர் ஆண்டுக்கு ஐபிஎல் தொடர் மூலமாக ரூ.30 லட்சம் ஈட்டி வருகிறார்.
2021ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அர்ஜுன் டெண்டுல்கர், அடுத்த ஆண்டிலேயே ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இதன் மூலமாக ரூ.1.40 கோடி ஊதியமாக பெற்றிருக்கிறார். அதேபோல் ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி உள்ளிட்ட தொடர்களில் கோவா அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் ஆடி வருகிறார்.
இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை ஊதியமாக பெற்று வருகிறார். தற்போது அர்ஜுன் டெண்டுல்கர் தந்தை சச்சினுடன் மும்பையில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறார். இது 2007ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ரூ.39 கோடிக்கு வாங்கியதாகும். தற்போது இதன் மதிப்பு ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் லண்டனில் சச்சின் டெண்டுல்கர் லார்ட்ஸ் மைதானத்திற்கு அருகில் ஒரு வீடு வாங்கி இருக்கிறார்.
அந்த வீட்டிற்கு அருகிலேயே சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் அகாடமியும் செயல்பட்டு வருகிறது. லண்டனில் இருக்கும் போது அர்ஜுன் டெண்டுல்கர் அந்த அகாடமியில் தான் பயிற்சி மேற்கொள்வார். அதுமட்டுமல்லாமல் அந்த அகாடமியை நிர்வகித்து வருவதும் அர்ஜூன் டெண்டுல்கர் தான் என்று கூறப்படுகிறது. இதனால் அர்ஜுன் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு ரூ.22 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.