4வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 4வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணியின் கடுமையான இலக்கான 222 ரன்களை சிறப்பாக சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இறுதி ஓவரில் வெற்றியை தவறவிட்டார்.
சதமடித்து அபாரம்
போட்டியின் இரண்டாவதாக களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சதமடித்து அணியை வெற்றிப்பாதையை நோக்கி கொண்டு சென்றார். ஆனால் இறுதி ஓவரில் 13 ரன்களை அடிக்க வேண்டிய நிலையில், இறுதி ஓவரை போட்ட பஞ்சாப் கிங்ஸ் பௌலர் அர்ஷ்தீப் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளார்.
சஞ்சு சாம்சன் அவுட்
மேலும் இறுதி பந்தில் 5 ரன்களை அடிக்க வேண்டிய நிலையில் சாம்சன் சிக்ஸ்க்கு முயற்சித்த நிலையில், அவரது விக்கெட்டை அர்ஷ்தீப் வீழ்த்தினார். இந்நிலையில் கடந்த சீசனிலேயே நெருக்கடியான ஓவர்களை தான் அர்ஷ்தீப்பிற்கு கொடுத்ததாகவும் அவரது பௌலிங் நெருக்கடி நேரங்களில் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
பௌலிங்கை என்ஜாய் செய்த அர்ஷ்தீப்
நெருக்கடி நேரத்தில் பந்து வீசும்போது அதை அவர் நெருக்கடியாக உணராமல், என்ஜாய் செய்து பௌலிங் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். தான் மைதானத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அர்ஷ்தீப் செயல்பட்டதாகவும் அதை விருப்பத்துடன் செய்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
சிறப்பாக கைகொடுத்த யார்க்கர்
இந்நிலையில் நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சனை வீழ்த்த வைட் யார்க்கர்களை வீசியதாகவும் அது சிறப்பாக கைகொடுத்ததாகவும் அர்ஷ்தீப் தெரிவித்துள்ளார். கடினமான நேரங்களில் தனக்கு ஆதரவாக தானே இருந்ததாகவும் அனைத்தையும் சிறப்பாகவும் எளிமையாகவும் செய்ய திட்டமிட்டு அதை செயல்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.