டப்ளின்: இந்திய அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடி வருபவர் அர்ஷ்தீப் சிங். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இந்திய அணிக்கு இடதுகை பந்துவீச்சாளர் ஒருவர் அத்தியாவசிய தேவையாக இருந்தார். அந்த நேரத்தில் தரமான யார்க்கர்களை சிறப்பாக வீசி டெத் ஓவர்களிலும் கட்டுப்பாட்டுடன் வீசினார் அர்ஷ்தீப் சிங். இதன் காரணமாக இந்திய அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணிக்கு வந்த போது 140 கிமீ வேகத்தை அர்ஷ்தீப் சிங் எட்டுவதே குதிரை கொம்பாக இருந்தது. இதனால் தனது தோள்களை வலிமையாக்க முடிவு செய்தார் அர்ஷ்தீப் சிங். அதற்கான பலன் களத்தில் உடனடியாக கிடைத்தது. அர்ஷ்தீப் சிங்கால் எளிதாக 140 கி.மீ வேகத்தில் அனைத்து பந்துகளையும் வீச முடிந்தது.
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக பும்ரா இருப்பதால், அர்ஷ்தீப் சிங்கை பவர் பிளே ஓவர்களில் பயன்படுத்தியது இந்திய அணி. பவர் ஓவர்களிலும் வேற மாதிரி பவுலர் என்பதை நிரூபித்து வந்தார். ஆனால் ஐபிஎல் போது அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்படாததால், மனதளவில் சில தயக்கங்களை எதிர்கொண்டு வந்தார். இதன் காரணமாக டெத் ஓவர்களில் சொதப்ப தொடங்கினார்.
குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதேபோல் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் கடைசி ஓவரில் 22 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் அர்ஷ்தீப் சிங் மீதான விமர்சனங்கள் அதிகரித்தது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி வெறும் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து அதிரடி வீரர் பால்பர்னி விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் இரண்டாமிடம் பிடித்துள்ளார். 33 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப் சிங் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவருக்கு முன் குல்தீப் யாதவ் 29 போட்டிகளிலும், சாஹல் 34 போட்டிகளிலும், பும்ரா 41 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர். இதனால் பலரும் அர்ஷ்தீப் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.