மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தலைமை பொறுப்பில் ஏற்றதில் இருந்து ஐசிசி தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் வரும் உலகக்கோப்பைத் தொடருடன் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. இதனால் ராகுல் டிராவிட்டின் இடத்திற்கு தகுதியான பயிற்சியாளரை பிசிசிஐ நிர்வாகம் தேடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பின்னரே இந்த முடிவுக்கு பிசிசிஐ வந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக டாம் மூடி, விவிஎஸ் லக்ஷ்மண், ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்டோர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக மாடலில் ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு என்று ஒரு பயிற்சியாளரையும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று பிரத்யேக பயிற்சியாளரையும் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் உலகக்கோப்பைக்கு பின் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி கட்டமைக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி பிளவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் அனலிஸ்டும், பல்வேறு அணிகளுக்கும் அனாலிஸ்டாக பணியாற்றி வரும் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி பிளவர் செயல்பட்டு வந்தார்.
இவரின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கரை லக்னோ அணி நிர்வாகம் நியமனம் செய்தது. அதேபோல் இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளராகவும் ஆண்டி பிளவர் செயல்பட்டுள்ளார். இவரது பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி தனது முதல் ஐசிசி கோப்பையான டி20 உலகக்கோப்பையை 2010ல் வென்றது. அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் அணியை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு சென்றவர்.
ஆனால் டங்கன் பிளட்சருக்கு பின் இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்கும் வழக்கம் முடிவடைந்தது. அதன்பின் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் செயல்பட்டனர். இதனால் மீண்டும் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ தயாராகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.