மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்தார் ஜஸ்பிரிட் பும்ரா. இதன்பின் இந்திய அணி விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஓய்வில் இருக்கும் சூழலில், அடுத்ததாக வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. அதன்பின் செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த முடிவை தற்போது தேர்வுக் குழு மாற்றியுள்ளது.

அதன்படி வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் பும்ராவை விளையாட வைத்துவிட்டு, 2வது டெஸ்ட் போட்டிக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடருக்கு இடையில் வெறும் 3 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.
இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2ல் பும்ராவை விளையாட வைத்துவிட்டு, ஒரு போட்டியில் ஓய்வளிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. பும்ரா இல்லாத பட்சத்தில் முகமது ஷமி மற்றும் சிராஜ் முதன்மை வேகப்பந்துவீச்சாளர்களாக செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி தரப்பில் பேசுகையில், சொந்த மண்ணில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் கூட அனுபவ வீரர்கள் தேவை. அதனால் அனைவருக்கும் ஓய்வு அளிக்க முடியாது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட, இந்திய சீனியர் வீரருடன் இணைந்து ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேமுறை தான் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பின்பற்றப்படும்.
அதேபோல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை மனதில் வைத்து துலீப் டிராபியில் சிறப்பாக விளையாடக் கூடிய வேகப்பந்துவீச்சாளர்களும் தேர்வு செய்யபப்டுவார்கள். அவர்களுக்கு ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக சொந்த மண்ணில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் சுமார் 2 மாதங்களுக்கு மேலாக ஓய்வில் இருப்பார். இதனால் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன் பும்ராவுக்கு சில போட்டிகளில் விளையாட வைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். கடைசியாக பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.