டெல்லி: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மட்டுமல்லாமல் சூர்யகுமார் யாதவும் சேர்த்தே நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியக் கோப்பைத் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்.17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை செப்.2ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. இதனால் நாளுக்கு நாள் ஆசியக் கோப்பைத் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடரில் குரூப் சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பின்னர் சூப்பர் 4 சுற்று நடத்தப்பட்டு கடைசியாக இறுதிப்போட்டி நடத்தப்படவுள்ளது.

இதற்கான இந்திய அணித் தேர்வு டெல்லியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பங்கேற்று அணியை தேர்வு செய்து வருகின்றனர். இதில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரரும், விக்கெட் கீப்பருமான கேஎல் ராகுல் முழுமையான உடற்தகுதியை பெற்றுள்ளதால், அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் இடதுகை பேட்ஸ்மேனான திலக் வர்மாவை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பேக் அப் ஓப்பனர் மற்றும் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இருக்கிறார். தேவையென்றால் இஷான் கிஷனை மிடில் ஆர்டரிலும் களமிறங்க முடியும். மும்பை அணிக்காக 4வது வரிசையிலும் விளையாடி இருக்கிறார்.
இதனால் சஞ்சு சாம்சனை ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் டி20யில் அசத்தும் சூர்யகுமார் யாதவையும் ஒருநாள் அணியில் தேர்வு செய்து ரிஸ்க் எடுக்க இந்திய அணி நிர்வாகம் தயாராக இல்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் இருவரையுமே ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.