இந்தூர்: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை சிதறடித்துள்ள சம்பவம் ரோகித் சர்மாவுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக தோனி பதவியேற்ற போது ஹர்பஜன் சிங் - பிரக்யன் ஓஜா ஆகியோரை ஸ்பின் டிவின்ஸாக பயன்படுத்தினார். ஒரு கட்டத்தில் ஹர்பஜன் சிங் - ஓஜா இருவரின் ஃபார்மும் மோசமாகியது. இதனால் இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா இணை கால் பதித்தது. இருவரையும் தனக்காக சுழல் ஆயுதமாக தோனி வைத்திருந்தார்.

2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரை அஸ்வின் - ஜடேஜா கூட்டணியை தான் விராட் கோலி நம்பி இருந்தார். ஆனால் அதன்பின் சாஹல் - குல்தீப் யாதவ் கூட்டணியை ஆதரித்தார். ஆனால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டில் உச்சத்திற்கு சென்றாலும், கடந்த 6 ஆண்டுகளில் அஸ்வின் வெறும் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அஸ்வின் - தோனி காம்போ மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் களம் புகுந்தது. முதல் போட்டியில் நல்ல பவுலிங்கை வெளிப்படுத்தினாலும், இருவரும் இணைந்து ஸ்பெஷலாக ஏதும் செய்யவில்லை.
இந்த நிலையில் 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மொத்த பேட்டிங்கையும் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி வாரி சுருட்டியது. மழைக்கு பின் ஆடுகளத்தில் சுழல் இருப்பதை கணித்த அஸ்வின், உடனடியாக அட்டாக்கில் வந்தார். அஸ்வின் வீசிய கேரம் பாலில் ஏமாந்த லபுஷேன் 27 ரன்களில் போல்டாகி வெளியேற, வேறு வழியில்லாமல் அஸ்வினை சமாளிக்க வலதுகை பேட்ஸ்மேனாக மாறினார் வார்னர்.
ஆனாலும் அஸ்வினின் சுழலில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் ஜோஷ் இங்லிஸையும் வீழ்த்தினார். இன்னொரு பக்கம் ஜடேஜாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இருவரும் இணைந்து 12.2 ஓவர்களில் 83 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஒரு கட்டத்தில் இருவரும் சேப்பாக்கம் மைதானத்தில் பந்துவீசுகிறார்களோ என்ற அளவிற்கு சந்தேகம் எழுந்தது. இதனால் உலகக்கோப்பை தொடரிலும் இவர்கள் கூட்டணி தொடருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.