லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான அஸ்வின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. டாஸ் வீசும் போது மேகமூட்டத்துடன் இருந்ததாலும், ஆடுகளத்தில் புற்கள் இருந்ததாலும், இந்திய அணி பிளேயிங் லெவனில் ஒரு சுழற்பந்துவீச்சாளரை மட்டுமே வைத்திருந்தது.
அஸ்வினை விட ஜடேஜா நல்ல பேட்ஸ்மேன் என்பதாலும், அணியின் ஒரே இடது கை பேட்ஸ்மேன் என்பதாலும், அவருக்கு தான் பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. இதனால், உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளர் அஸ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு இருந்தார்.

அஸ்வின் எப்போதுமே கிரிக்கெட் யுத்தியில் கை தேர்ந்தவர். எந்த மாதிரி யுத்திகளை அமைத்தால், எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்பதை அறிந்தவர். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி சில யுத்திகளை பயன்படுத்தி விக்கெட்டுகளை கொடுக்காமல் விளையாடி வந்தது.
இதனால், அஸ்வின் வாட்டர் பாயாக களத்திற்குள் வந்து, தன்னுடைய அறிவுரைகளை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வழங்கினார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் அஸ்வினை பாராட்டி வருகின்றனர். அணியில் இடமில்லை என்றாலும், கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல், வாட்டர் பாயாக வந்து அணியின் வெற்றிக்காக அறிவுரை வழங்கி சென்று இருக்கிறார்.
அஸ்வின் எப்போதுமே இடது கை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை அல்வா போல் எடுப்பார். தற்போது அஸ்வின் இல்லாததால், எந்த நெருக்கடியும் இன்றி ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடுகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை எடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. ரன்களை கட்டுப்படுத்துவது அவசியம். அஸ்வின் ஒரு முனையில் விக்கெட்டுகளை கட்டுப்படுத்தி இருந்தால், மறுமுனையில் பந்துவீசும் வீரர்களுக்காவது விக்கெட் கிடைத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.
இல்லையேனில், ஒரு ரன் எடுக்க ஆஸ்திரேலிய வீரர்களை தடுமாற வைத்திருக்க வேண்டும். ஆனால், இன்றைய ஆட்டத்தில் டி20 போட்டியில் ரன்கள் வருவது போல், ஆஸ்திரேலியாவுக்கு ரன் கிடைத்தது. எப்படி அணையில் 2 மதகுகளை வைத்து தண்ணீரை அடைத்து, ஒரு மதகில் திறந்தால் எப்படி தேங்கிய தண்ணீர் வெளியேறுமோ, அதே போல் சிராஜ், ஷமி, ஜடேஜா ஏற்படுத்திய அழுத்தத்தை உமேஷ் யாதவ் எளிதாக்கினார்.