இந்தூர் : இந்திய ஒருநாள் அணியில் டெஸ்ட் அணி வீரர் அஸ்வின் நீண்ட காலம் கழித்து இடம்பெற்று இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், அதற்கான பயிற்சியாக அவர் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று இருக்கிறார்.

ஆனால், ஆசிய கோப்பை நடந்த போதே அஸ்வினுக்கு இந்திய அணியில் சேர அழைப்பு வந்துள்ளது. ஆனால், அவர் அதை மறுத்து இருக்கிறார்.
அதன் காரணமாகத் தான் வாஷிங்க்டன் சுந்தர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஆட இலங்கை கிளம்பிச் சென்றார். இந்த விவரம் தற்போது தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மூலமாக வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.
இந்திய அணி முதலில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் என மூன்று சுழற் பந்து வீச்சாளர்களை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்து இருந்தது. இதில் அக்சர் பட்டேல் ஆஃப் ஸ்பின்னர். அவர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் காயத்தால் அணியில் இருந்து வெளியேறினார்.
அவருக்கு மாற்றாக ஆஃப் ஸ்பின்னர் பணியோடு, பேட்டிங்கில் கொஞ்சம் ரன்களும் எடுக்கும் வீரரை தேடியது இந்திய அணி. அப்போது கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட், அஸ்வினிடம் பேசி இருக்கின்றனர்.
அதற்கு இரு மாதங்கள் முன்பே அஸ்வினிடம் எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு உலகக்கோப்பை தொடருக்கான அழைப்பு வரலாம் என அவர்கள் கூறி வைத்திருந்ததால் அவரை இந்த இக்கட்டான நிலையில் அழைத்தனர். அவரால் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியுமா? என கேட்டுள்ளனர்.
ஆனால், அஸ்வின் தான் இன்னும் தயாராகவில்லை எனக் கூறி தன்னை தேடி வந்த வாய்ப்பை மறுத்துள்ளார். வாஷிங்க்டன் சுந்தர் அப்போது உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ஆடி வந்ததால் அவரை அணியில் எடுத்துக் கொள்ளுங்கள் என அஸ்வின் ரோஹித், டிராவிட்-இடம் கூறி இருக்கிறார். இதைத் தான் தினேஷ் கார்த்திக் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அதன் பின்னரே வாஷிங்க்டன் சுந்தர் அவசர அவசரமாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இலங்கை கிளம்பிச் சென்றார். ஆனால், பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் மற்றும் சுந்தர், இருவரின் பெயரும் இடம் பெற்றது. அப்போதும் கூட பலர் சுந்தர் தான் அணியின் முதல் தேர்வாக இருப்பார் என நினைத்த நிலையில், அஸ்வின் தான் முதல் ஒருநாள் போட்டியில் ஆடினார்.
அஸ்வின் தான் இன்னும் தயார் நிலையில் இல்லை எனக் கூறிய பின்னரும், கேப்டன் ரோஹித் சர்மா அவரை ஆட வைத்துள்ளார். அந்த அளவிற்கு அஸ்வினின் அனுபவம் மீது இந்திய அணி நம்பிக்கை வைத்துள்ளது. அஸ்வின் ஆஸ்திரேலிய தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடினால் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவது உறுதி.