மும்பை: பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு இடையில் எந்தத் தகவலும் பகிரப்படுவதில்லை என்று முன்னாள் வீரர் அஸ்வின் குற்றம்சாட்டியுள்ளார். ரோகித் சர்மா பதவி நீக்க விவகாரம் தொடர்பாக பேசிய அஸ்வின், ரோகித் சர்மாவை பதவி நீக்கம் செய்கிறோம் என்பதை முன் கூட்டியே தெளிவாக அவரிடம் அறிவுறுத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் சர்மா வெறும் தொடக்க வீரராக மட்டும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

இதனிடையே ரோகித் சர்மா சியர் விருது விழாவில் கம்பீர் பற்றி பேசாமல் தவிர்த்தது பேசுபொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வின் பேசுகையில், நிச்சயமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருடமும் நிறைய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் எனது கேள்வி என்னவென்றால், டி20 உலகக்கோப்பையிலேயே ஓய்வை அறிவித்தார்கள்.
அப்போதே இதுதொடர்பான ஆலோசனை ஏன் நடக்கவில்லை என்பது தான். இந்த ஆலோசனை சில மாதங்களுக்கு முன்பே நடந்திருந்தால், அவர்கள் தொடர்ந்து விளையாடலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்திருப்பார்கள். இந்திய அணி இந்த பாதையில் பயணிக்க உள்ளது என்பதை இருவரிடமும் தெளிவாக பேசி இருக்க வேண்டும். ஆனால் இப்போது பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் வீரர்களுக்கு இடையில் போதுமான ஆலோசனை நடப்பதில்லை.
இரு தரப்பிலும் தகவலை கூறுவதில்லை. இதுபோன்ற விஷயங்களின் போது வீரர்கள் அமைதி காத்து வருகின்றனர். அதற்கு, எந்த பேச்சுவார்த்தையோ, ஆலோசனையோ நடக்காதது தான். இந்திய அணி இந்தப் பாதையில் பயணிக்கிறது, இப்படி மாற்றங்கள் செய்ய உள்ளோம் என்பதை கூறிவிட்டாலே போதும்.. ஆனால் அப்படி யாரும் சொல்வதே இல்லை.
இந்திய அணிக்காக விராட் கோலியும், ரோகித் சர்மாவும் அளித்துள்ள பங்களிப்பு மிகப்பெரியது. குறைந்தபட்சம் அவர்களுடன் முறையாக பேச்சுவார்த்தை மரியாதை அளித்திருக்க வேண்டும். ஒருவேளை விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் 2027 உலகக்கோப்பை தொடரில் விளையாட விரும்பினால், அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றே கூறுவேன்.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரை தவிர்த்து வேறு எந்த வகையான கிரிக்கெட்டையும் இருவரும் அதிகமாக விளையாடுவதில்லை. அதனால் 2027 உலகக்கோப்பையில் இருவரும் விளையாடினால், அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். அந்த சாதனையை படைப்பதற்கான களத்தை நாம் தான் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.