பிரிஸ்பேன்: இந்திய அணியின் சீனியர் வீரர்களாக இருந்த அஜிங்கியா ரஹானே, புஜாரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூவரும் பயிற்சியாளர்களாக கம்பேக் கொடுப்பார்களா என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் அஜிங்கியா ரஹானே மற்றும் புஜாரா இருவரும் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது இந்திய அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்து இளம் வீரர்களுக்கு வழிவிட்டு சென்றுள்ளார்.

அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் ரோஹித் சர்மாவும் ஓய்வை அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ரோஹித் சர்மா அப்போது 38 வயதை எட்டுவதோடு, பேட்டிங்கிலும் மோசமான ஃபார்மில் இருக்கிறார். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க பும்ராவும் முழுமையாக தயாராகிவிட்டார்.
அவரின் தொடக்க வீரர் ரோலில் விளையாட கேஎல் ராகுல், அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் மூவரும் தயாராக இருக்கின்றனர். இதனால் இந்திய ரசிகர்கள் அடுத்த அதிர்ச்சிக்கு தயாராக வேண்டும்ம் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த பின், கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் தரப்பில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் வேறு ஏதும் சர்ப்ரைஸ் அறிவிப்பு வருமா என்ற கேள்விக்கு, நிச்சயம் இனி எந்த் சர்ப்ரைஸ்-ம் இருக்காது என்று பதில் அளித்தார். தொடர்ந்து அஸ்வின், ரஹானே மற்றும் புஜாரா மூவரும் இந்திய அணியின் பயிற்சியாளர்களாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ரோஹித் சர்மா, சில நேரங்களில் உங்களின் கேள்விகள் என்னை ஒரு பாடுபடுத்திவிடுகிறது. சில நேரங்கள் சில வீரர்கள் இணைந்து நீண்ட ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் போது, ஒவ்வொரு வீரராக ஓய்வை அறிவிப்பார்கள். ஆனால் நானும் ரஹானேவும் எப்போதும் நண்பர்கள் தான். கிரிக்கெட் விளையாட இணைந்து பயணிக்கவில்லை என்றாலும், மும்பையில் நாங்கள் சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம்.
புஜாரா ராஜ்கோட்டிலேயே தங்கி இருந்தாலும், அவரையும் சந்திக்கிறேன். அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக அதிக ரன்களை விளாசி ஏராளமான வெற்றிகளுக்கு காரணமாக அமைந்துள்ளனர். அதேபோல் ரஹானே மற்றும் புஜாரா இருவரும் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை. அவர்கள் இந்திய அணியில் தான் இல்லை.
அவர்களுக்காக எந்த நேரமும் பிசிசிஐ கதவுகள் திறந்தே இருக்கிறது. அவர்கள் ரஞ்சி டிராபியில் கன்சிஸ்டன்சியுடன் ரன்களை சேர்க்கும் பட்சத்தில், நிச்சயம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியும். இந்த கேள்வியால் என்னை பிரச்சனையில் சிக்க வைத்துவிட்டிருப்பீர்கள் என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார். மேலும் புஜாரா தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.