பிரிஸ்பேன்: இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வறையில் சக வீரர்களின் முன்னிலையில் கடைசியாக பேசிய வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வின் பேசும் போது விராட் கோலி, முகமது சிராஜ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். இதன்பின் அஸ்வினுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வாழ்வின் 2வது இன்னிங்ஸில் அடுத்த உயரத்தை எட்டுவதற்காக சச்சின் தொடங்கி பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

அஸ்வினின் இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்புவதற்கு முன்பாகவே அஸ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மண், தோனி உள்ளிட்டோர் எப்படி திடீரென ஓய்வை அறிவித்து சென்றார்களோ, அப்படியே அஸ்வினும் ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அஸ்வின் பத்திரிகையாளர்கள் முன் ஓய்வை அறிவித்த நொடி முதல் இந்திய அணியின் ஓய்வறைக்கு சென்று பேசியது வரை வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், அஸ்வின் ஓய்வை அறிவித்த பின் நடந்து சென்ற போது ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் நேதன் லயன் தரப்பில் ஆஸ்திரேலியா வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக அளிக்கப்பட்டது.
அதேபோல் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஹெய்டன், கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். இதன்பின் அஸ்வின் சக இந்திய வீரர்கள் முன், இந்த தருணம் மிகவும் எமோஷனலாக அமைந்துள்ளது. 2011-12ஆம் ஆண்டு முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அதுதான் எனக்கு முதல் ஆஸ்திரேலியா பயணம்.

அப்போது ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஜாம்பவான்கள் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர். எல்லோருக்கும் ஓய்வு பெறுவதற்கான நேரம் வரும். இன்றைய நாள் எனக்கான நேரம். இந்த பயணத்தை மிகவும் ரசித்தேன். கடந்த 5 ஆண்டுகளாக இந்திய வீரர்கள் பலருடனும் நெருங்கிய நட்பு கொள்ள முடிந்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், எனக்குள் இருக்கும் கிரிக்கெட்டருக்கு ஓய்வு கிடையாது. நாளை நான் விமானம் ஏறி சென்னை சென்றாலும், மெல்போர்னில் இந்திய அணியின் ஆட்டத்தை நிச்சயம் பார்ப்பேன். உங்கள் யாருக்காவது ஏதாவது தேவைப்பட்டால் ஒரேயொரு கால் செய்யுங்கள். நான் நிச்சயம் அங்கு இருப்பேன். கவுதம் கம்பீர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

அஸ்வின் பேசும் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, முகமது சிராஜ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பலரும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தனர். அதேபோல் அஸ்வினின் கண்களில் வரும் கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு தனது கடைசி உரையை பேசி முடித்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.