பிரிஸ்பேன்: இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சொந்த மண்ணில் ஃபேர்வெல் டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் ஓய்வை அறிவித்துள்ளார். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜாம்பவான் வீரரை பிசிசிஐ மிக சாதாரணமாக ஓய்வு பெற அனுமதித்தது ஏன் என்ற காரணம் குறித்து தெரிய வந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் துலீப் டிராபி தொடர் குறித்து அஸ்வின் பேசுகையில், துலீப் டிராபி விளையாடும் ஸ்பின்னர்களை கவனித்து கொண்டிருந்தேன். வாஷிங்டன் சுந்தர், தனுஷ் கோட்டியான், ஹிருத்திக் ஷோக்கின், சரன்ஷ் ஜெய்ன் உள்ளிட்டோரை பிசிசிஐ தயார் செய்வது தெரிகிறது. அப்போது என் மனைவி ஒரு கருத்தை கூறினார்.

அவர்கள் அனைவரும் நீ எப்போது ஓய்வை அறிவிப்பாய் என்று தான் காத்திருப்பார்கள் என்று கூறினார். ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நானும் அதுபோன்ற சூழலில் இருந்திருக்கிறேன் என்று வெளிப்படையாகவே பேசியிருந்தார். அதற்கேற்ப அஸ்வினின் இடத்தை நிரப்ப வாஷிங்டன் சுந்தர் தயாராகிவிட்ட நிலையில், உடனடியாக ஓய்வை அறிவித்திருக்கிறார்.
இருந்தாலும் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய ஜாம்பவானுக்கு சொந்த மண்ணில் ஃபேர்வெல் கொடுத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் அஸ்வின் மீது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் வன்மத்தை கக்கிவிட்டதாகவும், ஆஸ்திரேலியா தொடரில் வாய்ப்பு அளிக்காததாலேயே அஸ்வின் ஓய்வை அறிவித்ததாகவும் விவாதங்கள் நடந்து வருகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்கனவே 38 வயதை எட்டிவிட்ட நிலையில், சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் அடைந்த தோல்வி மிகப்பெரிய சறுக்கலாக அமைந்தது. அந்த டெஸ்ட் தொடருக்கு பின் அஸ்வின் பேசிய போதும் கூட, இந்த டெஸ்ட் தொடர் தோல்விக்கு நானும் முக்கியமான காரணம் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.
அதேபோல் வெளிநாடுகளில் அஸ்வின் முதன்மை ஸ்பின்னராக செயல்பட்டதில்லை. தற்போது வாஷிங்டன் சுந்தரால் அஸ்வினை விடவும் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்பதால், அடுத்தடுத்து வரும் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். இதுகுறித்து பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ உடன் அஸ்வின் நீண்ட ஆலோசனையை மேற்கொண்டிருப்பார்.
அதனை அஸ்வினும் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இன்னும் 8 மாதங்கள் ஃபேர்வெல் டெஸ்ட் போட்டிக்காக அஸ்வின் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஓய்வு குறித்து ராகுல் டிராவிட் ஒருமுறை பேசுகையில், மக்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்று கேட்பதை விடவும் ஏன் ஓய்வு பெற்றீர்கள் என்ற கேள்வி எழுப்பும் போதே நாம் விலகி செல்ல வேண்டும் என்று கூறியிருப்பார். இதனால் ராகுல் டிராவிட்டின் வார்த்தைகளை அஸ்வின் பின்பற்றி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.