கவுகாத்தி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீசிய போது, எதிர்முனையில் ஷிகர் தவான் நின்றிருந்தார். அப்போது பந்தை வீசுவதற்குள், தவான் கிரீஸை கடந்து முன் நகர்ந்த போது உடனடியாக அஸ்வின் பந்துவீசுவதை நிறுத்தியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று தொடங்கியுள்ள 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் மைதானத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி தரப்பில் பிரப்சிம்ரன் சிங் - ஷிகர் தவான் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்த கூட்டணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. ராஜஸ்தான் அணியின் போல்ட், ஆசிஃப், அஸ்வின் ஆகியோரை பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் சிங் வெளுத்து வாங்கினார். ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரியை விளாசி அசத்தினார்.
இந்த நிலையில் 7வது ஓவரை அஸ்வின் பந்துவீசிய போது, பிரப்சிம்ரன் சிங் கவனமாக எதிர்கொண்டார். அப்போது ஷிகர் தவான் விரைந்து ரன்கள் சேர்க்க வேண்டும் என்று பந்துவீசுவதற்கு முன்பாக கிரீஸை விட்டு வெளியேறி வந்தார். இதனை கவனித்த அஸ்வின், மீண்டும் ஷிகர் கிரீஸில் இருந்து வெளியேறிய போது பந்துவீசுவதை திடீரென நிறுத்தினார். இதனால் அஸ்வின், ஷிகர் தவானை ரன் அவுட் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதையும் செய்யாமல் மீண்டும் பந்துவீச சென்றார்.
அப்போது ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்ப, கேமரா ஜோஸ் பட்லரை காட்டியது. இதேபோல் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் இருந்த போது, ராஜஸ்தான் அணிக்காக ஆடிய ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அஸ்வின் வீழ்த்தியது அனைவரின் நினைவுகளிலும் வந்து சென்றது. இதன்பின்னர் அஸ்வின் பந்துவீசி முடிக்கும் வரை ஷிகர் தவான் கிரீஸில் இருந்து வெளியே வரவில்லை.