துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட ஒரு ட்வீட்டை வைத்து, ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். அதற்கு அஸ்வின் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி பந்து வீசிக் கொண்டிருந்தபோது, வருண் சக்கரவர்த்தியை ஆறாவது ஓவரை வீச வைத்தார் கேப்டன் ரோஹித். அப்போது அஸ்வின், "வருண் சக்கரவர்த்தி மிகவும் சீக்கிரமாக பந்துவீச வந்துவிட்டார், இது சரியான சூழ்நிலை இல்லை" என்று ஒரு ட்வீட்டை பதிவிட்டார்.

அப்போது நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான வில் யங்கின் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை அவர் பெற்றுக்கொடுத்தார். இதனை அடுத்து, அஸ்வின், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சனம் செய்ததாகவும், ஆனால் அது பலன் அளித்துவிட்டதாகவும் ரசிகர்கள் அஸ்வினை விமர்சிக்கத் தொடங்கினர்.
அதாவது, வருண் சக்கரவர்த்தி முன்கூட்டியே பந்து வீசக் கூடாது, அது சரியான அணுகுமுறை இல்லை என அஸ்வின் சுட்டிக்காட்டிய நிலையில், ரோஹித் சர்மா நினைத்ததை போலவே வருண் சக்கரவர்த்தி முதல் விக்கெட்டை வீழ்த்திவிட்டார். எனவே ரோஹித் எடுத்த முடிவு சரியானது தான் என அஸ்வின் வெளியிட்ட பதிவின் கீழ், ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் வரிசையாக கருத்துக்களை பதிவிட்டு அஸ்வினை விமர்சனம் செய்தனர்.
அதற்கு அஸ்வின் பதிலடி கொடுக்கும் விதமாக மற்றொரு பதிவை வெளியிட்டார். "நான் வெளியிட்ட பதிவு கேப்டன்சியைப் பற்றியது இல்லை. ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களுக்கும் இருக்கும் ரசிகர் கூட்டம் மிகவும் பைத்தியக்காரத்தனமாக உள்ளது. என்னுடைய பதிவில் நியூசிலாந்து அணி ஆடிய ஆட்டத்தால் வருண் சக்கரவர்த்தி முன்பே பந்து வீச வேண்டிய சூழல் வந்துவிட்டது என்பதை தான் நான் சுட்டிக்காட்டி இருந்தேன்" என்று விளக்கமும் அளித்திருந்தார்.
அந்தப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி 45 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 40 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 251 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 49 ஓவர்களில் இலக்கை எட்டி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது.